லூக்கா 9 : 23-26 27 ஜனவரி 2026, செவ்வாய்
“அவர்கள் சொல்லுகிறார்கள்; செய்கைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.” – தீத்து 1 : 16
அது ஒரு அலுவலகம். உயர் அதிகாரியின் பி.ஏவாக செயல்படுபவர்.ஊழியர்களுக்கு பல வேலைகளை சொல்லிக் கொண்டிருப்பார். ஊழியர்கள் செய்ய மறுத்தால் ஐயா சொல்ல சொன்னாரு… நான் சொல்றேன். நானா எதுவும் சொல்லல என்று சொல்லுவார். இது அவரது நிரந்தர வாசகம். பல வேளைகளில் ஊழியர்களுக்கு பிஏ வின் பேச்சில் சந்தேகம் இருந்தாலும் பேசாமல் இருந்தார்கள். ஒரு முறை கருத்து கேட்பு கூட்டத்தில் பி.ஏ வின் குட்டு வெளிப்பட்டது. ஐயா சொல்லாத பலவற்றையும் பி.ஏ சுயநலமாக ஊழியர்களை செய்ய வைத்து இருக்கிறார். ஊழியர்களை ஏமாற்றி இருக்கிறார் என்ற உண்மை வெளிப்பட்டது
இன்றைய தியான வசனம் கிரேத்தா தீவில் உள்ள திருச்சபை மற்றும் சபையாருக்கு சொல்லப்பட்டது.
கிரேத்தா தீவில் உள்ள திருச்சபைகள் கிறிஸ்துவை அறிந்த விசுவாசிகள். ஆனால் அவர்களில் பலர் தங்கள் விசுவாசத்தில் இருந்து வழுவி கள்ள தீர்க்கதரிசனங்களை சொல்லுகிறவர்களாக மாறி இருந்தார்கள். இது அவர்களது சுயநல எண்ணங்களால் வந்தது. இந்த திருச்சபைகளை சீர்செய்ய பவுல் தீத்துவை நியமித்தார். அவருக்கு எழுதிய நிருபங்களிலே தன்னுடைய ஆலோசனைகளை கொடுக்கிறார். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு உள்ள சபையாரை, தீர்க்கதரிசிகளை கையாளும் விதத்தை விவரிக்கிறார்.
நமது சொல்லும் செயலும் ஒன்றிணைந்து செல்லும் போதுதான் நம் மீது எல்லாருக்கும் நம்பிக்கை வரும். ஆனால் இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் ஆன நாம் வாய் நிறைய வேத வசனங்களை வைத்துக்கொண்டு மனம் நிறைய துவேசத்தையும், சுயநலத்தையும், பொறாமையையும் மற்றும் எல்லா மோசமான குணங்களையும் வைத்திருக்கிறோம். அப்படியானால் நம்முடைய சொல்லும் செயலும் எப்படி ஒன்றிணையும்? உண்மையில் நாம் கடவுளை ஏமாற்றுகிறோம் என்பதுதானே பொருள். இன்றைய தியான வசனம் நம்மை ஆராய்ந்து பார்க்கத் தூண்டுகிறது. சீர்திருத்திக்கொள்ள அழைக்கிறது. ஆண்டவரின் வார்த்தைகளே நம்முடைய வார்த்தைகளாக இருக்க வேண்டும். ஆண்டவரின் வார்த்தைகளே நம்முடைய செயல்பாடுகளாக மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
அன்பு என்பது சுயநலமாக மொழிபெயர்க்கப்படக்கூடாது. கருணை என்பது பொறாமையாக மொழிபெயர்க்கப்படக்கூடாது. இதை ஆண்டவர் விரும்பவில்லை. நாம் கடவுளின் அன்பை அன்பாகவே ருசித்து இருக்கிறோம். கடவுளின் கிருபையை கிருபையாகவே ருசித்து இருக்கிறோம். மீட்பை மீட்பாகவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் நாம் பிறருக்கு பகிர்ந்து அளிக்கும்போது மட்டும் ஆவியின் கனிகள் நிறம் மாறி சுயநலத்தின் கனிகளாக போவது தவறு. இதை ஆண்டவர் வெறுக்கிறார். இயேசுவின் பிள்ளைகளாக அவருடைய வார்த்தைகளை பேசுகிறவர்களாக மட்டுமல்லாமல் செயலிலும் அதையே காட்டுகிறவர்களாக நாம் வாழ்வோம்.
அன்பின் கடவுளே! நீர் அன்பானவராகவே இருக்கிறீர். உமது மகனின் வழியே எங்களுக்கு வாழ்க்கையின் தேவையான அன்பையும் நம்பிக்கையும் கிருபையும் கொடுத்திருக்கிறீர். இதை அனுபவிக்கிற நாங்கள் இவற்றையே மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
