உபாகமம் 4 : 32-34                          23 ஜனவரி 2026, வெள்ளி

“இவைகள் எல்லாம் உனக்குச் சம்பவிப்பதால் நீ வியாகுலப்படுகையில்… கர்த்தரிடம் திரும்பி… செவிகொடுப்பாய்.”

– உபாகமம் 4 : 30

ஒரு ஆசிரியர் மிகவும் அன்பானவர். மாணவர்களை அடித்ததே கிடையாது. மாணவர்கள் லேட்டாக வந்தாலும் சரி, சண்டை போட்டுக் கொண்டாலும் சரி, வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்தாலும் சரி, பரிட்சையை ஒழுங்காக எழுதவில்லை என்றாலும் சரி யாரையும் எதற்கும் அடிக்க மாட்டார். சிரித்துக்கொண்டே திரும்பத் திரும்ப சொல்லுவார். சரி இந்த தடவை விட்டுவிடு. இனிமேல் ஒழுங்கா இரு என்று சொல்லுவார். மற்ற ஆசிரியர்கள் இதை பார்த்து கிண்டல் செய்வார்கள். அதற்கு அவர் பெரியவர்களான நாமே தப்பை உணர்வதில்லை, மனம் திருந்துவதும் இல்லை. சின்ன பிள்ளைகள்… அறியாத வயசு… அவர்களை எப்படி தண்டிப்பது என்று கேட்பார்.

உபாகமம் நூலின் ஒரு பகுதி முழுவதும் கடவுளுக்கும் கடவுளின் மக்களான இஸ்ரவேலருக்கும் இடையே உருவான உடன்படிக்கையைப் பற்றி பேசுகிறது. தமது மக்களான இஸ்ரவேலர் தனக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்த்தார். ஆனால் இஸ்ரவேலர் தொடர்ந்து கீழ்ப்படியாமையில் நிலைத்து இருந்தார்கள். இது கடவுளை கோபப்படுத்திற்று. தன் மக்களை மறுசீரமைக்க திரும்பி தன்னிடம் கொண்டு வர அவர் தண்டனையை பிரயோகிக்க தயங்கவில்லை. இங்கே தண்டனையும் அன்பின் ஒரு பகுதி ஆக்கப்பட்டிருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நம்முடைய வாழ்விலும் ஞானஸ்நானத்தின் வழியே கடவுளின் பிள்ளையாக உறுதி செய்யப்படுகிறோம். தொடர்ந்து திருவிருந்து நம்மை சுத்திகரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அல்லது திருவிருந்து பெரும் போதெல்லாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக புதிய படைப்புகளாக நாம் வெளிவருகிறோம். ஆனாலும் சிலுவையில் இருந்து நமக்கு கிடைத்த மீட்பிற்கு நாம் தகுதியானவர்களாக வாழ்வதில்லை. கடவுளுக்கு எதிரான எல்லா பாவங்களையும் செய்கிறோம். அதன் வழியே கடவுளுக்கு கோபத்தை வருவிக்கிறோம். கடவுள் நம்மை மன்னிக்கிறவராக மட்டுமல்லாமல் சில சமயங்களில் கண்டிக்கிறவராகவும் தண்டிக்கிறவர் ஆகவும் இருக்கிறார். இந்த மூன்று செயல்பாட்டின் காரணமும் கடவுள் நம்மீது கொண்ட அன்பு மட்டுமே. நாம் மனம் திரும்பி மன்னிப்பை பெற்றவர்களாக கடவுளிடம் சேருவதற்கு திரும்பத் திரும்ப நமக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றன. நம்முடைய வாழ்க்கைச் சூழல் பாவம் செய்வதை ஊக்குவிப்பதாக இருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது நாம் கடவுளின் மக்கள். பாவ வாழ்வை அவர் வெறுக்கிறார். பாவத்திலிருந்து விலகி வாழ நம்மை அவர் அழைக்கிறார். பாவம் செய்ய சோதனை வரும்போதெல்லாம் கடவுளின் பாதங்களை பிடிப்போம். அவர் நம்மை காப்பார்.

அன்பின் கடவுளே! நாங்கள் பாவிகள். பாவத்தை விட்டு விலகி இருக்க எண்ணினாலும் அது எங்களால் முடியாமல் போகிறது. எங்களை இயேசுவில் மன்னியும். எங்களை புதிய படைப்பாக்கி உம்மிடம் சேர்த்துக் கொள்ளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.