சங்கீதம் 38 : 18-22 22 ஜனவரி 2026, வியாழன்
“அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கண்டித்து சிட்சிக்கையில்…. எந்த மனுஷனும் மாயையே.” – சங்கீதம் 39 : 11
அவர் ஒரு மூத்த போதகர். எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கி மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு நலம் பெற்று வீடு திரும்பினார். சொந்தங்கள் அவரிடம் நீங்கள் எவ்வளவு உண்மையான நேர்மையான மனிதர். கடவுள் ஏன் உங்களை இப்படி தண்டித்தார் என்று கேட்டார்கள். அதற்கு அந்த போதகர் எல்லா மனிதரைப் போலவும் நானும் பாவிதான். என்னை தண்டிக்கவும் திருத்தவும் என் தகப்பனாகிய கடவுளுக்கு முழு உரிமையும் உண்டு என்று சொன்னார்.
இன்றைய தியான வசனம் தாவீதால் சொல்லப்பட்டது. அவர் தனது பாவ நிலையை உணர்ந்து ஜெபத்தின் வழியே கடவுளிடம் புலம்புகிறார். இதில் கடவுளின் பரிசுத்தமான தன்மையும் அவரது பிள்ளைகளான மனிதரின் பாவ நிலையும் பேசப்படுகிறது. தாவீது தன் வார்த்தைகள் வழியே மனிதர்கள் நிலையற்றவர்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். கடவுளுக்கு எதிராக பாவம் செய்த தாவீது தன்னை கண்டிக்க கடவுளுக்கு உரிமை இருக்கிறது. இந்த கண்டிப்பு மற்றும் தண்டனை தான் மனம் திருந்துவதற்காக கடவுளால் நிகழ்த்தப்படுவது என்றும் அவர் விளக்குகிறார். அவர் தனது மரணத்திற்குகூட தயாராகி விட்டார் என்றும் சொல்லலாம்.
நமது வாழ்க்கையில் பல நேரங்களில் பாவம் செய்வதை தினசரி வேலையாக செய்து கொண்டிருக்கிறோம். நாம் கடவுளுக்கு எதிராக கடவுளின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுகிறோம் என்று மனம் உணர்த்தினாலும் நம் அறிவு நம்மை ஆட்கொள்ளுகிறது. கடவுளை விட்டு விலகி இருக்கச் செய்கிறது. பாவத்தினால் கிடைக்கும் செழிப்பான கவர்ச்சியான பலன்களிலே நாம் ஈர்க்கப்பட்டு விடுகிறோம். ஆனால் கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அன்பிற்கு பாத்திரரான பிள்ளைகளான நாம் வழி தவறிச் செல்லுவதை அவர் விரும்பவில்லை. எனவே சிறு தண்டனைகள், கண்டிப்புகள் வழியே அவர் நம்மை மனம் திரும்ப அழைக்கிறார். கண்டிப்பு சில நேரங்களில் நமக்கு பிரியமானவற்றை நம்மிடமிருந்து எடுத்து விடுவதாகவும் நடக்கிறது.
இந்த உலகத்தில் பிறந்த யாரும் மரணத்திற்குப் பிறகு எதையும் தன்னோடு கொண்டு போக முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ளுவது நல்லது. ஆண்டவரின் பிள்ளைகளாக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம், நாம் அவரால் தெரிவு செய்யப்பட்டு அவருடைய மீட்பை பெற்றுக் கொண்டிருக்கிறோம். அப்படியெனில் கடவுளின் பிள்ளையாகவே வாழ்ந்திருந்து திரும்பச் செல்வதுதானே சரியான பாதையாய் இருக்கும். பாவம் செய்ய சோதிக்கப்படும் போதெல்லாம் ஆண்டவரை பற்றிக் கொள்ளுவோம். ஒருவேளை மனித பலவீனத்தினால் பாவத்தை செய்து விட்டாலும் அவரிடம் மனம் வருந்தி மன்னிப்பை கேட்போம். மனம் திரும்புவோம். புது வாழ்வு வாழுவோம்.
கர்த்தாவே! எங்கள் வாழ்நாள் குறுகியது. அந்த நாட்களில் இயேசுவில் நாங்கள் உமது பிள்ளைகளாக வாழ்ந்து இருக்கவும் உமது தண்டனையை, கண்டிப்பை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளவும் எங்களுக்கு அறிவை தாரும். அதன் வழியே நாங்கள் மனம் திரும்ப ஆவியானவர் எங்களுக்கு உதவ கெஞ்சி மன்றாடுகிறோம். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
