சங்கீதம் 31 : 11-12 20 ஜனவரி 2026, செவ்வாய்
“உன்னையோ சர்வ சங்காரஞ்செய்யேன், மட்டாய்த் தண்டிப்பேன் … தண்டியாமல் விடேன்.” – எரேமியா 46 : 28
அது ஒரு பெரிய அலுவலகம். அதில் நாலு பேர் சேர்ந்து ஒரு குற்றத்தை செய்து விட்டார்கள். அலுவலகம் விசாரணை நடத்தியது. குற்றம் பெரியது என்பதால் சஸ்பென்ஷன் அல்லது டிஸ்மிஸ் என்று தண்டனை உறுதியாயிற்று. நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் கவனத்திற்கு இது கொண்டு போகப்பட்டது. அவர் அந்த நான்கு பேரில் ஒருவருக்கு மட்டும் தண்டனையை குறைத்தார். ரொம்ப ஏழை, பிள்ளை குட்டிகளை வைத்திருக்கிறான் என்று காரணம் சொன்னார்.
இன்றைய தியான வசனத்தை பாருங்கள். இஸ்ரவேலர் கடவுளின் மக்கள். அவர்கள் திரும்பத் திரும்ப கடவுளுக்கு எதிரான பாவங்களை செய்து கொண்டு இருந்தாலும் கடவுள் அவர்களை முற்றிலுமாக கைவிடவில்லை. சின்ன சின்ன தண்டனைகள், எச்சரிப்புகள் வழியே அவர்களை திரும்ப தம்மிடம் சேர்த்துக் கொள்ளவே முயற்சி செய்தார். இஸ்ரவேலுக்கு சோதனைகளை கஷ்டங்களை கொண்டு வந்த தேசங்களை கடவுள் கண்டித்தார். இஸ்ரவேலரை அவர்களிடம் இருந்து விடுவித்தார்.
இந்த வாக்குறுதியே இந்த தியான வசனத்தில் தொனிக்கிறது. இஸ்ரவேலரை எதிர்த்தவர்களை தண்டிப்பேன் என்று மட்டும் சொல்லாமல் நீங்களும் தவறு செய்து இருக்கிறீர்கள் உங்களையும் தண்டிப்பேன் என்று கூறுகிறார். மட்டாக தண்டிப்பேன் என்று சொல்லுவதன் வழியே தண்டனையின் அளவு குறைகிறது என்பது நமக்குப் புரிகிறது. கடவுள் தம் மக்களை தண்டித்து தன்னுடைய வல்லமையை காட்ட முயலாமல் அன்பின் வழியே அவர்களது மனம் திரும்புதலையே, திரும்ப கட்டப்படுதலையே விரும்புகிறார் என்பதையே இந்த வசனம் நமக்கு உணர்த்துகிறது.
அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ பாவங்களை செய்கிறோம். பல நேரங்களில் நம்முடைய மனதிற்கு நாம் பாவம் செய்கிறோம் என்பது தெரிந்தே செய்கிறோம். அப்படி இருக்கும்போது நாம் குற்றமற்றவர்களாக கடவுளின்முன் நிற்க முடியாது. நம்முடைய பாவங்களுக்கு பதிலாளாகத்தான் இயேசு சிலுவையில் தொங்கினார். அவரது மரணத்தின் வழியாக நமக்கு நம்முடைய பாவங்களில் இருந்து விடுதலை கிடைத்தது. இதை இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் நன்றாக அறிவோம். ஆனாலும் நாம் தொடர்ந்து பாவத்தையே செய்து வருகிறோம்.
இன்றைய தியான வசனத்தின் எச்சரிப்பு நம் காதுகளில் எப்போதும் ஒலிக்கட்டும். நாம் கடவுளின் பிள்ளைகள்தான். ஆனாலும் நாம் தெரிந்தே செய்கிற பாவங்களுக்கு கடவுளின் தண்டனையும் நமக்கு வரத்தான் செய்யும். எச்சரிக்கையாய் இருப்போம். பாவத்திலிருந்து நாம் விலகி நடக்க நமக்குத் தேவையான மனத் துணிவை இறைவசனங்கள் வழியே தூய ஆவியானவர் நமக்குத் தந்தருள தொடர்ந்து வசனத்தில் நிலைத்திருப்போம்.
அன்பின் கடவுளே! நீர் எங்களை இயேசுவில் அன்பாய் இருக்கிறீர், நேசிக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம். அந்த அன்பிற்கு பாத்திரராக நாங்கள் பாவத்திலிருந்து விலகி வாழ எங்களுக்கு மனபலத்தை கொடுத்தருளும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
