சங்கீதம் 94 : 8-12 19 ஜனவரி 2026, திங்கள்
“உமது உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்… என்னைக் கண்டியாதேயும்.” – சங்கீதம் 38 : 1
ஒரு போதகரின் மகன் வீட்டுக்கு அடங்காமல் திரிந்தார். பரம்பரை சொத்தை ஊதாரியாக செலவு செய்து நண்பர்களோடு வெட்டியாய் வாழ்ந்தார். கடைசியில் கொலை கேசில் அகப்பட்டார். பிறகு வந்து அப்பா அம்மா காலை பிடித்து தெரியாமல் செய்து விட்டேன் என்னை எப்படியாவது இதிலிருந்து மீட்டு விடுங்கள் என்று அழுதார்.
இன்றைய தியான வசனம் 38 ஆம் சங்கீதத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. தாவீதின் இந்த சங்கீதத்தின் பின்னணி அனேகமாக நமக்கு தெரிந்திருக்கலாம். தாவீது பத்சேபாள் மீது மோகம் கொண்டு தவறிழைக்கிறார். இதை தெரிந்துகொண்ட பத்சேபாளின் கணவர் உரியாவை, ஆள் வைத்து திட்டமிட்டு கொலை செய்கிறார் தாவீது. இந்தப் பாவங்கள் கடவுளை கோபப்படுத்தியது.
தாவீது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தன்னால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இத்தகைய பாவத்தை செய்தது கடவுளுக்கு வேதனையை அதிருப்தியை கொண்டு வந்தது. இதை நாத்தான் வேல் தீர்க்கர் வழியாக தாவீதுக்கு தெரியப்படுத்தினார் கடவுள். கலங்கிப் போனார் தாவீது. கடவுளை நேசித்த, கடவுளை முழுவதுமாக அறிந்த தாவீது கடவுளின் கோபத்தையும் அறிந்திருந்தார். தனது தவறை உணர்ந்து அவர் சன்னதியில் விழுந்து கெஞ்சினார், புலம்பினார்.
பல நேரங்களில் நாம் செய்கிற தவறுகள் பிறருக்கு தெரியாது என்று தைரியமாக இருக்கிறோம். அந்த தைரியம் நாம் தொடர்ந்து தவறிலேயே நிலைத்திருக்கவும் நம்மை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் எல்லாவற்றையும் அறிந்த கடவுளுக்கு நாம் எதையாவது மறைக்க முடியுமா? நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிற கடவுள் நம்மை எச்சரிக்கிறார். நீ தவறு செய்கிறாய்… உன் தவறுகளை நான் அறிவேன். இந்த தவறுகளை விட்டு நீ விலகு …என்று நம்மை அழைக்கிறார். ஒருவேளை நம்மால் நம் தவறுகளை பொதுவில் பேசவும், ஏற்றுக் கொள்ளவும், விவாதிக்க முடியாமல் போனாலும் சுயபரிசோதனை நம் அனைவருக்கும் அவசியம். சுயபரிசோதனை நம்மை மனம் திரும்புதலுக்கு வழி நடத்தும்.
ஆண்டவரின் குரலை காது கொடுத்து கேட்போம். நமது பாவ வழிகளை விட்டு விலக அவரது உதவியை நாடுவோம். எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நம்மை மன்னிக்கவும் மீட்டெடுக்கவும் கடவுள் காத்திருக்கிறார். இயேசு நம்முடைய கதறல்களை கெஞ்சல்களை காது கொடுத்து கேட்பார். எத்தகைய பாவம் செய்திருந்தாலும் நம்முடைய குரலுக்கு மனம் திரும்புதலுக்கு அவரிடம் மதிப்பு உண்டு. ஆண்டவரிடம் திரும்பி வருவோம். சமாதானமான வாழ்க்கைக்கு உரியவர் ஆவோம். கடவுள் இயேசுவில் நம் பாவங்களை மன்னிக்கிறார். இந்த நிச்சயத்தில் கடவுளிடம் வருவோம். அவர் பிள்ளைகளாக வாழுவோம்.
அநாதி கடவுளே! நீர் எங்கள் பாவங்களை மன்னிப்பதற்காக உமது மகனையே சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தீர். நாங்கள் எங்கள் உலக வாழ்க்கையில் எண்ணற்ற பாவங்களை செய்து கொண்டிருக்கிறோம். உமது கோபத்தில் எங்களை தண்டியாதிரும். நாங்கள் மனம் திரும்பி இயேசுவில் புது வாழ்வு வாழ கிருபை செய்யும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
