ஏசாயா 56 : 1-5                             17 டிசம்பர் 2025, புதன்

“நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு நீதியை அனுசரியுங்கள்; சீக்கிரத்தில் என் இரட்சிப்பு வரும், என் நீதி வெளிப்படும்.”
– ஏசாயா 56 : 1

ஏசாயா தீர்க்கன் பழைய ஏற்பாட்டின் நற்செய்தியாளர் என்று அழைக்கப்படுகிறார். இன்றைய வாசிப்புப் பகுதியின் முந்தைய அதிகாரத்தை வாசிக்கும்போது, பாபிலோன் அடிமைத்தனத்தில் வாழ்கிற இஸ்ரவேலரை வாருங்கள் உணவு ஆயத்தமாயிருக்கிறது என்கிறார். அத்துடன் வந்து உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள அழைக்கிறார். தாவீதுக்கு அருளிய கிருபை வரங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று கடவுள் சொல்லுவதைப் பார்க்கிறோம். இதன் வழியாக மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள அழைக்கிறார்.

இதைத் தொடர்ந்து அனைத்துலக ஜெபவீட்டில் தூய கடவுள் வழிபாட்டிற்கு நான்கு கருத்துக்களை முன்வைக்கிறார். 1. நியாயத்தைக் கைக்கொள்ள வேண்டும்; 2. இதற்கு அடிப்படை இரட்சிப்பு; 3. இதனால் கிடைக்கும் பலன் பாக்கியவான்கள் ஆக்கப்படுவீர்கள் என்றும்; 4. இவற்றின் பலன் ஓய்வுநாள் ஆசரிப்பு என்றும் சொல்லுகிறார்.

தீமையை விட்டுவிடுவதற்கு மீட்பின் அனுபவமே அடிப்படை. நீதி நியாயம், நல்லொழுக்கம் கடவுள் வழிபாடு சார்ந்த கட்டளைகளை குறிக்கும். இந்தப் பகுதியில் ஓய்வு நாள் ஆசரிப்பு மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

படைப்பின் வரலாற்றை நாம் வாசிக்கும்போது, ஆற்றல் மிகுந்த கடவுள் ஆற்றல் மிகுந்த வார்த்தையால் ஒன்றும் இல்லாமையிலிருந்து அழகிய மண்ணுலகைப் படைத்தார். ஆறு நாட்களில் படைப்பின் பணியை முடித்தப் பின்பு ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஓய்ந்திருந்தபடியினால் கடவுள் அந்த நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தப்படுத்தினார் (ஆதி.2:2-3) என்று வாசிக்கிறோம்.

ஓய்வுநாள் உலகைப் படைத்த கடவுளால் ஏற்படுத்தப்பட்டது. எனவே அனைத்துலகத்துக்கும் உரிய ஓர் ஒழுங்கு மோசே காலம் முதல் அனுசரிக்கப்பட்டது. கடவுள் சீனாய் மலையில் மோசேயை இணைப்பாளராகக் கொண்டு இஸ்ரவேலரோடு உடன்படிக்கை செய்தார். (யாத்.34:27-28) நான் உங்கள் கடவுள், நீங்கள் என் மக்கள் என்பதே உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையின் உறவில் வாழ பத்து கற்பனைகளை கொடுத்தார். அதில் ஒரு கற்பனை ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிப்பதாகும்.

நியாயம், நீதி ஆகிய சொற்கள் நல்லொழுக்கமும், கடவுள் வழிபாடு சார்ந்த கட்டளைகளையே குறிக்கிறது. அத்துடன் கீழ்படிதலையும் வலியுறுத்துகிறது. பாக்கியவான்கள் என்னும் சொல் மகிழ்ச்சியுடையோரை குறிப்பாய் கீழ்படிவோரின் மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் விளக்குகிறது.

கடவுள் இயேசுவில் நம்மோடு கல்வாரி மலையில் புது உடன்படிக்கை பண்ணியிருக்கிறார். பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவித்திருக்கிறார். மீட்பின் அனுபவத்தை ருசித்த நாம் தீமையை விட்டு விலகி வாழ கடமைப்பட்டுள்ளோம். நாம் இறைவார்த்தையில் வாழும்படி பாவமன்னிப்பை உறுதிசெய்ய கிருபையின் எத்தனங்களான திருமுழுக்கு, திருவிருந்து ஆகியவற்றை பெற்றுக்கொள்ள திருச்சபைகளை கடவுள் நிறுவியிருக்கிறார்.

ஆலய வழிபாட்டில் கருத்துடன் ஒழுங்காக பங்கடைவோம். ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவோம்.

மனுக்குலம் வாழ்வு பெற திருச்சபைகளை நிறுவியிருக்கும் கடவுளே! இதில் ஒழுங்காக பங்குபெற்று உம் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.