சங்கீதம் 50 : 10-15 27 நவம்பர் 2025, வியாழன்
“எல்லாருக்கும் ஜீவனையும், சுவாசத்தையும்… கொடுக்கிறவர்.” – அப்போஸ்தலர் 17 : 25
நாம் இவ்வுலகில் உயிர் இருப்பவர்களாக வாழ சுவாசம் மிக அவசியம். ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு சான்று சுவாசம் ஆகும். சுவாசிக்கவில்லை என்றால் உயிர் இல்லை என்று பொருள்.
ஆனால் ஜீவனை நமக்கு யாராவது கொடுக்க முடியுமா? புத்தரின் வாழ்க்கையில் தன் மகனை உயிரோடு திரும்ப திருப்பி வேண்டி கொண்ட போது, அந்த தாயாரிடம் அம்மா, ‘மரணம் இல்லா வீட்டில் சென்று ஒருபிடி அரிசி வாங்கி வாருங்கள்’ என்று சொன்னார். அந்த தாயார் ஒவ்வொரு வீட்டிலும் சென்று அரிசிக்காக விசாரிக்கிறபோது ஒவ்வொரு வீட்டிலும் மரணம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்டார். புத்தரிடம் ‘மரணம் இல்லா வீடு இல்லை’ என கூறியபோது புத்தர் ‘மரணம் எல்லாருக்கும் பொதுவானது’ என தேற்றி அனுப்பினார்.
ஆனால் இயேசு நாயீன் ஊர் வாலிபன் இறந்தபோதும், லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகியபோதும், யவீரு மகள் மரித்த போதும் அவர்களுக்கு மீண்டும் ஜீவனைக் கொடுத்து மீண்டும் சுவாசிக்க செய்தார் என வேதத்தில் வாசிக்கிறோம்.
உலகில் வாழும் ஒவ்வொருவரின் தேவைகளை நாம் அறிவோம். தேவைகள் நிறைவேற்றபடாமல் போகலாம். நிறைவேறாத தேவைகளால் உயிர் வாழலாம். மாடி வீட்டில் வாழுகிறவர்களுக்கும், குடிசை வீட்டில் வாழுகிறவர்களுக்கும் வசதிகளில் வித்தியாசம் உண்டு. ஆனால் இருவருக்கும் ஜீவன் இல்லாவிட்டால் எந்த பயனும் இல்லை.
நம்முடைய வீட்டில் தந்தை நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க உழைக்கிறார். தாயார் தன் உயிரையும் கொடுத்து இவ்வுலகத்திற்கு நம்மைக் கொண்டு வந்துள்ளார். குடும்பங்களில் அன்பு கொடுக்கிறவர்கள் உறவினர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் ஜீவனை, சுகத்தை கடவுள் ஒருவர் தான் நமக்கு கொடுக்க முடியும். அதை மனிதர்கள் யாரும் கொடுக்க முடியாது. ஜீவனும், மரணமும் கடவுளிடம் உள்ளதை நம்பி வாழ்வோம்.
ஜீவனை பெற்று இருக்கிறோம் என்றால் நம் வாழ்வு அதற்கு சாட்சியாக இருக்க வேண்டும். விசுவாசமுள்ள வாழ்வாக இருக்க வேண்டும். இவை இல்லை என்றால் நாம் வாழும் வாழ்வு செத்ததாக இருக்கும் என்பதனை புரிந்து வாழ்வோம்.
அன்புள்ள கடவுளே! உமது சுவாசத்தையும் ஜீவனையும் பெற்று வாழும் எங்கள் வாழ்வு பிறருக்கு முன்மாதிரியான ஜீவனுள்ள வாழ்வாக அமைய அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.
