மத்தேயு 12 : 33-37 25 நவம்பர் 2025, செவ்வாய்
“பொல்லாத சிந்தனைகள், கொலை பாதகங்கள், விபசாரங்கள்… இவைகள் இருதயத்திலிருந்து வெளிப்பட்டு வரும்.”
– மத்தேயு 15 : 19
நான் ஆம்பூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 1983-85 படித்து கொண்டு இருக்கும்போது எங்களுடைய முதல்வர் திரு.ஐசக் ஆசிரியர் கடவுள் நம்மிடம் கை, கால், காது, மூக்கு, நாக்கு இவைகளைக் கேட்டால் கொடுக்கலாம். ஆனால் எவ்வளவு ரகசியங்களையும், சிந்தனைகளையும், ஆசைகளையும் மறைத்து வைத்து வாழுகிற இருதயத்தைக் கேட்கிறார். எப்படி கொடுக்க முடியும் என்பார். எவ்வளவு உண்மை.
புகை பிடிப்பது, குடிப்பது, கெட்ட வார்த்தை பேசுவது இந்த மனிதர்களை வெளிப்படையாக பாவம் செய்கிறார்கள் என கூறிவிடலாம். ஆனால் பொல்லாத சிந்தனைகளையும், கொலை பாதகத்தையும், விபசாரங்களையும் இருதயத்தில் வைத்து வாழுகிறவர்கள் பாவி என கண்டுபிடிக்க முடியாது.
யோசேப்பை, குழியில் தள்ளிவிடப்பட்டதும் எகிப்திற்கு அவனை அடிமையாக விற்றதும், யாக்கோபிடம் யோசேப்பின் ஆடைகளை காண்பித்து விலங்குகள் அவனை கொன்று இருக்கலாம் என சகோதரர்கள் கூறியது இருதயத்தின் கேடுகளால் விளைந்தவை என்பதனை அறிவோம்.
தாவீது உரியாவின் மனைவியை அடைவதற்கு இருதயத்தில் பொல்லாத சிந்தனைக் கொண்டார். கொலை செய்து உரியாவின் மனைவியை அடைந்தது எவ்வளவு பெரிய பாவம். நாத்தான் தீர்க்கதரிசி உணர்த்துவதை மூலம் படிக்கிறோம்.
இயேசுவானவர் ஒரு பெண்ணை இச்சையாக பார்க்கிறவன் அவளோடு விபசாரம் செய்து விட்டான் என கூறுகிறார். கடவுள் பரிசுத்தத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என அறியலாம்.
இருதயத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்றால் நல்ல சிந்தனைகள், எண்ணங்கள் அங்கு தங்க வேண்டும். அதற்காகவே கடவுளின் வசனம் நமக்கு கொடுக்கப்படுகிறது. ஆலய ஆராதனைக்கு செல்வது ஓர் பரிசுத்த வாழ்வை நாம் பெற்றுக் கொள்வதற்காக என்பதனை எப்போதும் இருதயத்தில் வைத்துக் கொள்வோம்.
குடும்பங்களில் தாய், தந்தை தங்களின் இருதயத்தில் நல்ல சிந்தனைகள் கொண்டு இருப்பதால் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு வழிவகை செய்துள்ளார்கள்.
பொல்லாத சிந்தனைகளால் எத்தனை கொலைகள் நாட்டில் நடக்கிறது, களவுகள் நடக்கிறது இருதயத்தில் சுத்தம் காணப்பட்டால் பிறரின் குறைகள் பெரிதாக தெரிவது இல்லை. பிறர் குறைகளை மன்னிக்க தோன்றும், மன்னிப்போம். நல்ல மரம் எப்போதும் நல்ல கனி கொடுக்கும் என்பதனைப் புரிந்துக் கொள்வோம்.
கடவுளின் இருதயம் அன்பு, இரக்கம், கருணை, கீழ்படிதல், பாவங்களை வெறுத்தல், ஏழைகளுக்கு இரங்குதல், இவைகளால் நிரம்பி இருக்கிறது. அவரைப் போல் இருதயத்தைப் பெற்று உலகில் வாழ அழைக்கப்படுகிறோம். கடவுளைப்போல் வாழ்வோம்.
அன்புள்ள கடவுளே! எங்கள் இருதயத்தை உம்மிடம் ஒப்படைக்கிறோம். நல் மனசாட்சியுடன் வாழ நீர் எங்களுக்கு உதவி புரியும். உமது கருணைமிக்க இருதயத்தைப் பெற்று வாழ அருள்புரியும். இயேசுவின் வழியே, ஆமேன்.
