ரோமர் 12 : 19-21                                              24 நவம்பர் 2025, திங்கள்

“அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் ….. பலவீனருடைய பலக்குறைவுகளைச் சுமக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.” – ரோமர் 15 : 1

நாகர்கோவிலில் செவன்ட்-டே ஆலயத்தில் போதகராக ஊழியம் செய்து வரும் போதகர் அவர்கள் தினமும் காலையில் அவரின் வீட்டில் காலை உணவு தயார் செய்து தன் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று நாகர்கோவில் சுற்றியுள்ள மனநிலை பாதிக்கப்பட்டு சாலை ஓரங்களிலும், சுற்றி திரிபவர்களுக்கும் ஆகாரம், தண்ணீர் கொடுத்து போஷித்து வருகிறார். ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல தினமும் இந்த அருட்பணியை செய்து வருகிறார். பலவீனர்களுக்கு உதவி செய்யும் இந்த போதகரை பாராட்டாதவர்கள் இல்லை.

உலகில் ஒரு கூட்டம் மக்கள் தங்களுக்காக வாழ்கிறார்கள், இன்னும் சிலர் தங்கள் குடும்பங்களுக்காக வாழ்கிறார்கள். பலர் தங்கள் சார்ந்த மக்களுக்காக வாழ்கிறார்கள். பலர் குறைவுள்ளவர்களுக்காய், ஏழைகளுக்காய், நீதிமறுக்கப்பட்டவர்களுக்காய், வாழ்பவர்கள் என அறிந்து கொள்ளலாம்.

இயேசு இவ்வுலகில் எதற்காக வந்தார் என லூக்காவின் புத்தகத்தில் வாசிக்கிறோம். தரித்திரருக்கு நற்செய்தி அறிவிக்க, சிறைப்பட்டவர்களை விடுவிக்க, குருடர் பார்வையடைய, நொருங்குண்டவர்களை விடுதலையாக்க என்ற பகுதியில் யாரெல்லாம் பலவீனராக இருக்கிறார்களோ அவர்களின் குறைகளை நீக்கி அனுப்பப்பட்டதாக அறிந்து கொள்ளலாம்.

நம்முடைய மிஷனரிகள் செய்த தியாகங்களை மறந்து போக வேண்டாம். செல்வமிகுந்த குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் இயேசுவின் அன்பில் ஈர்க்கப்பட்டு உலக மீட்பர், இரட்சகர் இயேசுவை அறிவிக்க இந்திய தேசத்திற்கு வந்தார்கள். ஏழ்மையில், வறுமையில், அடிமைத்தனத்தில், இருந்த மக்களுக்காக பரிதாபப்பட்டு அவர்களை உயர்ந்த நிலைக்க கொண்டுவர பாடுபட்டார்கள் என்பதனை அறிவோம்.

உடன்கட்டை ஏறுதல் என்னும் கொடிய பழக்கத்திலிருந்து விடுதலை பெற்று தந்தார்கள். கல்வி அறிவு பெற முடியாதவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுத்தார்கள். மருத்துவ வசதி பெற முடியாத மக்களுக்கு மருத்துவ வசதியை ஏற்ப்படுத்தினார்கள். இறைவனை வழிபட முடியாத மக்களை கடவுளை துதிக்க ஆராதிக்க ஆலயங்கள் கட்டினார்கள். இவை அனைத்தும் பலம் குறைந்த மக்களுக்கு ஆற்றிய அரும் தொண்டாகும்.

ஏழைக்கு இரங்குகிறவன், கடவுளுக்கு கடன் கொடுக்கிறார் என வேதத்தில் வாசிக்கிறோம். பலவீனருடைய சுமைகளை தாங்க நம்மை அவருடைய பிள்ளைகளாய் அழைத்து இருக்கிறார். நம்முடைய வாழ்வில் காணப்படும் பலமுள்ள செய்கைகள், பலவீனருடைய விசுவாச வாழ்வுக்கு தடை பண்ணாதபடி கவனமாக இருப்போம்.

அன்னை தெரசா அம்மையார் தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை விற்று தொழு நோயாளிகளின் மருத்துவ செலவிற்கு கொடுத்தது பலவீனரை தாங்கிய செயலாகும்.

நம்முடைய வாழ்வில் பலவீனராகிய நம்முடைய சகோதர, சகோதரிகளை அரவணைப்போம், பிறருக்காக வாழ கற்றுக் கொள்வோம்.

திருசபையில் எளிய விசுவாசிகளை தூக்கி விடுவோம். அவர்கள் விசுவாசம் குறையாதபடி நம்முடைய வாழ்க்கை அவர்களுக்கு முன்மாதிரியாக அமையட்டும். பலவீனரை தாங்குவோம்.

அன்புள்ள கடவுளே! நீங்கள் எங்களை பலவீனர்களை தாங்கி வழிநடத்த அழைத்திருக்கிறீர். அந்த அழைப்பை சரியாக செய்ய அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.