எசேக்கியல் 33 : 11-13                                    23 நவம்பர் 2025, ஞாயிறு

“கர்த்தர் மீனுக்குக் கட்டளையிடவே, அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.” – யோனா 2 : 10

கட்டளையும் , கீழ்படிதலும் மிக முக்கிய பங்கினை நமக்கு கற்று தருகிறது. ஆதாம், ஏவாள் இருவருக்கும் ஏதேன் தோட்டத்தில் காணப்படும் கனிகளில் ஒன்றை புசிக்க வேண்டாம் எனக் கட்டளையிட்டார். ஆனால் அந்த கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படியாததால் பாவத்தில் மனிதகுலம் விழுந்தது என படிக்கிறோம்.

இஸ்ரவேல் மக்களுக்கு நியாயப்பிரமாணம் என்ற கட்டளை கொடுக்கப்பட்டது. கட்டளையை மீறும்போது எல்லாம் அவர்கள் அந்நிய தேசத்தாருக்கு அடிமையானார்கள்.

சவுல் ராஜாவுக்கு எதிரி நாட்டை வெற்றிக்கொண்டு திரும்ப வரும்போது அங்கிருந்து ஒன்றையும் எடுத்து வரவேண்டாம் என கட்டளை கொடுக்கப்பட்டது. கீழ்ப்படியாமையால் அரசாட்சியை இழக்கும் நிலையை அடைந்தார்.

இஸ்ரவேலர் மக்களை மோசே நடத்திவரும்போது செங்கடல் தடையாக இருந்தது, மோசேயிடம் கடவுள் கோலை கடலுக்கு நேராக நீட்ட கட்டளையிட்டார். மோசே கீழ்படிந்து கோலை நீட்டியபோது செங்கடல் இரண்டாக பிளந்து நின்றது. இஸ்ரவேலர் பாதை வழியாக நடந்தார்கள், தப்பினார்கள்.

யோனா கடவுளின் கட்டளைக்கு கீழ்படியாதபோது சோதனை வந்தது, மீனின் வயிற்றில் இருக்க நேர்ந்தது. மீனுக்கு கடவுள் கட்டளையிட்டார் அது கீழ்படிந்தது யோனா தப்பித்தான்.

கடவுளின் வார்த்தை வல்லமையுள்ளது. நாம் அதற்கு கீழ்படிய வேண்டும். கீழ்படிகிறபோது ஆசீர்வாதமான வாழ்வு கிடைக்கிறது, கீழ்படியாதபோது சாபமான வாழ்வு நமக்கு வருகிறது.

நம்முடைய பிள்ளைகள் நமக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என விரும்பும் பெற்றோர்களாகிய நாம் முதலில் கீழ்படிந்து வாழ்ந்து அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்வை காட்டவேண்டும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கீழ்படிந்து நடக்க வேண்டும்.

திருசபைகளில் கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து முன்மாதிரியான வாழ்வை மேற்கொள்ள அழைக்கப்படுகிறோம்.

கீழ்படிந்து வாழ்ந்து கடவுளை மகிமைப்படுத்துவோம்.

அன்புள்ள கடவுளே! அனைத்து படைப்புகளும் உம் வார்த்தைக்கு கீழ்படிவது போல நாங்களும் உமது வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க அருள்தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.