2 தினவர்த்தமானம் 20 : 1-4 21 நவம்பர் 2025, வெள்ளி
“எங்களுக்கு விரோதமாக வருகிற இந்த ஏராளமான கூட்டத்தின் முன் நிற்க எங்களுக்கு பலமில்லை.” – 2 தினவர்த்தமானம் 20 : 12
எங்களுக்கு விரோதமாக வருகிற இந்த ஏராளமான கூட்டத்தின் முன் நிற்க எங்களுக்கு பலமில்லை.
யோசபாத் அரசன் இஸ்ரவேலரை ஆண்டு வரும் நாட்களில் அவரை எதிர்க்க மோவாபியர், அம்மோனியர் மெயூனியர் ஒன்றுகூடி இஸ்ரவேலரை அழிக்க முன்வந்தபோது கூறிய வார்த்தைகளாகும்.
பொதுவாக எதிராளிகளின் பலத்தை கண்டு அஞ்சி நடுங்குகிறோம். ஒருவேளை பணம் படைத்தவர்களாக, படைபலம் உடையவர்களாக, உயர் பதவியில் உள்ளவர்களாக, ஆள்கூட்டம் நிறைந்தவர்களாக இருப்பவர்களை கண்டு பயப்படுகிறோம். இவர்களால் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் தீங்கு ஏற்படலாம் என பயப்படுகிறோம்.
எதிரிகளை விட நம்மால் நன்மை பெற்றவர்கள் நமக்கு விரோதமாக எழும்பி நிற்கும்போது பயப்படுகிறோம். அதுபோலவே இஸ்ரவேலர் கானான் தேசத்திற்கு கடந்து போகும் போது மோவாபியர், அம்மோனியர், மெயூனியர் வாழும் பகுதியில் மக்களும் நிலங்களும் சேதம் அடையாததற்கு அவர்கள் வாழும் பகுதி வழியாக வழிநடத்தப்படாமல், வேறு வழியாக நடத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இன்று ஒன்றுகூடி இஸ்ரவேலரை அழிக்க வந்து இருப்பதுதான் வேதனை அளிப்பதனை யோசபாத் அரசர் கூறுகிறார்.
சவுல் ராஜாவும், இஸ்ரவேலர் ராணுவ வீரர்களும் கோலியாத்தை எதிர்க்க பலமில்லை என ஒதுங்கி நின்றார்கள் என பார்க்கிறோம். ஆனால் தாவீது அவனின் பலத்தையும், உருவத்தையும் பார்க்காமல் தன்னுடன் வாழும் கடவுளின் பலத்தையும், வல்லமையையும் பார்த்தான். கோலியாத்தை வெற்றி கண்டார். எதிராளியின் பலத்தை பார்க்காமல் நாம் ஆராதிக்கிற கடவுளின் வல்லமையை பார்த்து தைரியம் கொண்டு வெற்றி பெற வேண்டும்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ மூவரும் தீயில் போடுவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டார்கள். அது தங்களை கொன்றுபோடும் என தெரிந்து கொண்டனர். ஆனாலும் அவர்கள் தீயைவிட கடவுளின் வல்லமையை நினைவு கூர்ந்தார்கள். அவற்றில் இருந்து விடுவிக்க கடவுள் வல்லவர் என வார்த்தைகளால் விசுவாசத்தை பகிர்ந்தார்கள் வெற்றி கண்டார்கள்.
தானியேல் சிலையை வணங்காவிட்டால் சிங்க கெபியில் போடபடுவேன் என அறிந்தும் கடவுளுக்கு செலுத்த வேண்டிய கனத்தை செலுத்தி ஜெபித்தார். சிங்க கெபியிலே போட்டபோது கடவுள் சிங்கங்களின் வாயை கட்டிபோட்டார். தானியேல் அரசனுக்கு பதில் கூறியதை கேட்ட அரசர் தானியேலின் கடவுளே வாழும் கடவுள் என பறைசாற்றினார்.
நம்முடைய வாழ்விலே கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற விசுவாசத்துடன் வாழ கற்று கொண்டால் நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை. கடவுளை நம் பலமாக கொண்டு வாழ்வோம்.
அன்புள்ள கடவுளே! எங்களுக்கு எதிராக வரும் சோதனைகளை மேற்கொள்ள உமது பலத்தை தாரும். எங்கள் பலம் உமது கிருபையால் கிடைக்க அருள்தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
