சங்கீதம் 32 : 6-7 20 நவம்பர் 2025, வியாழன்
“சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் உயர்ந்த அடைக்கலமானவர்.” – சங்கீதம் 9 : 9
அடைக்கலம் என்பதற்கு பாதுகாப்பு என்று பொருள்படும். கொரனா காலத்தை ஞாபகப்படுத்துவோம். அநேக மக்களை அந்த கொடுர நோய் வாரிக்கொண்டு போனது. பயம், திகில் அனைத்து மக்களையும் சந்தித்தது. ஆலயங்களில் இறைவழிபாடு இல்லாமல் போயிற்று. அனைவரும் வீட்டில் முடக்கப்பட்டார்கள்.
ஆனால் எத்தனை தொண்டு நிறுவன ஊழியர்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இரவும் பகலும் உழைத்தார்கள்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் என்ற பட்டணத்தில் கத்தோலிக்க போதகர் தன் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை பெட்டியை திறந்து வெளியே வைத்தார்கள். தேவையான பணத்தை இல்லாதவாகள் எடுத்துக்கொண்டு பிழைத்து கொள்ளுங்கள். மீண்டும் உழைக்கும் காலத்தில் கொண்டு வாருங்கள். ஏழை மக்களுக்கு கடவுளின் அன்பை காண்பித்தார்.
இஸ்ரவேலர் மக்களை பார்த்து மோசே கூறும்போது நீங்கள் கொஞ்ச ஜனமாக இருந்ததினால் உங்களை தம் ஜனமாக கடவுள் தெரிந்து கொண்டார் என பார்க்கிறோம்.
பிற மதத்தில் இருந்து கிறிஸ்துவை ஏற்று கொண்ட சகோதரி ஒருவர் கடவுளை ஏற்றுக் கொண்டு குடும்பமாக அவரை ஆராதித்து வந்தார்கள். வயதான காலத்தில் குடும்பத்துடன் சென்ற பயணத்தில் விபத்தில் கணவர் மரித்து போனார். அவருடைய குடும்பத்தார் கிறிஸ்துவை உன் கடவுளாக ஏற்று கொண்டதால் இன்று இந்த நிலைமை என கூறினார்கள். அந்த சகோதரியோ விபத்தில் என் கணவர் மரித்தாலும் நானும் என் பிள்ளைகளும் அற்புதமாக காப்பாற்றியவர் இயேசு அவரே மெய்யான கடவுள் சாட்சி கூறினார்கள்.
ஒவ்வொரு நாளும் கடவுள் ஜீவனை தந்து பாதுகாப்பது கடவுளின் கிருபையால்தான். எத்தனையோ ஆபத்துகள், கொடிய நோய்கள், பஞ்சம், பட்டினி இவைகளில் இருந்து காப்பவர் கடவுள் என்பதனை அறிவோம்.
நமது திருச்சபையிலே ஏழ்மை நிலையில் இருந்து கர்த்தரை விசுவாசித்து வாழும் குடும்பங்களுக்கு உதவி செய்திட அழைக்கப்படுகிறோம். எத்தனையோ திருச்சபைகளில் ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு திருமண உதவிதொகை, கல்வி உதவிதொகை இவைகள் சிறப்பு திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன.
நம்முடைய சமூகத்தில் சிறுமைப்பட்டவர்களுக்கு நாம் உதவிட அழைக்கப்படுகிறோம். சிறிய பண உதவிகள், பாதுகாப்பு, சிறந்த வார்த்தைகள், விசாரிப்புகள் இவைகளின் மூலம் அவர்களுக்கு அடைக்கலமாக வாழ்வோம். கடவுள் நம்மை வாழ வைத்துள்ளார். சிறுமைபட்டவர்களின் ஒளியாக வாழ்வோம்.
அன்புள்ள கடவுளே! சிறுமைப்பட்ட எங்களை உமது கிருபையால் உயர்த்தி வாழ செய்கிறீர். நாங்களும் பிறருக்கு அரணாக வாழ கிருபை புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
