மத்தேயு 13 : 40-44 19 நவம்பர் 2025, புதன்
“அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” – லூக்கா 1 : 33
உலகத்தில் ராஜாக்கள் அரசாண்ட காலங்களை வரலாற்றில் படித்து இருக்கிறோம். ஒவ்வொரு ராஜாக்களும் பதவி ஏற்ற நாளிலிருந்து பதவி முடிந்த நாள் வரை அறிந்திருக்கிறோம். உலகத்தை தன் ஒரே ஆட்சியின்கீழ் கொண்டுவர புறப்பட்ட மகா அலெக்சாண்டர், நெப்போலியன் அரசர்களின் வரலாறுகளும் முடிந்து போயிருக்கின்றன.
யூதர்களை கொன்று, குவித்த ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரும் ஒரு நாள் மரித்து போனார். ஆனால் கடவுளின் ராஜ்யம் முடிவில்லாதது என பார்க்கிறோம்.
வேதத்தில் நாம் படிக்கிறோம். கர்த்தர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார். கர்த்தர் மோசேயை இஸ்ரவேல் ஜனங்களின் விடுதலைக்காக அனுப்பினார். மோசே ஜனங்களிடம் கர்த்தர் இருக்கிறவராகவே இருக்கிறார் என்று சொல்வதன் மூலம் கர்த்தர் என்றும் அரசாளுகிறார் என தெரிந்து கொள்ளலாம்.
வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் ஆதியும், அந்தமும் நானே என்கிறார். அல்பா, ஒமேகா என்கிறார். அவரின் ராஜ்யத்திற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை.
நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ தலைமுறையினர் இவ்வுலக வாழ்வை முடித்துள்ளனர். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மேய்ப்பர்களுக்கு கூறிய நற்செய்தி இன்றும் அறிவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இதனை நாம் சிந்தித்தால் கடவுளின் ராஜ்யம் முடிவில்லாதது என அறியலாம்.
தியான பகுதியில் மரியாளிடம் தேவதூதன் சொன்ன வாக்குத்தத்தம் அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது என்பதாகும். நம்முடைய விசுவாச பிரமாணத்தில் அதனை தினமும் உறுதிபடுத்துகிறோம்.
இயேசுவானவர் சீஷர்களுக்கும் நமக்கும் கற்று தந்த ஜெபத்தில் உம்முடைய ராஜ்யம் வருவதாக என உறுதி படுத்துகிறோம்.
கடவுளின் ராஜ்யத்தில் நாம் வாழ்கிறோம். கடவுளின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை தினந்தோறும் வளர வேண்டும். நாம்
நிர்மூலமாகாமல் இருப்பது கடவுளின் கிருபையாகும். அவர் வாழ்கிறார் என்பதால் நாமும் வாழ்கிறோம்.
நாம் சாட்சியாக வாழும் போது பிறர் கடவுளின் ராஜ்யம் உண்மையாகவே இன்றும் ஆட்சி செய்கிறது என்பதனை அறிய முடியும்.
கடவுளின் ராஜ்யத்திற்கு நாமே சாட்சிகள் என்பதனை உணர்ந்து வாழ்வோம்.
அன்புள்ள கடவுளே! உம்முடைய ஆட்சியில் நாங்களும் வாழும்படியாக அழைக்கப்படுகிறோம். அந்த அழைப்பை ஏற்று உமது ராஜ்யத்தின் பிள்ளைகளாக வாழ அருள்தாரும் ஆண்டவரே, இயேசுவின் வழியே, ஆமேன்.
