லூக்கா 12 : 4-7                                               07 நவம்பர் 2025, வெள்ளி

“பயந்து சென்று உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்.” – மத்தேயு 25 : 25

பயம் மனிதனை ஒடுக்கிவிடுகிற ஓரு நோயாகும். இயேசு பிறப்பின்போது மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்ட முதல் வார்த்தை பயப்படாதிருங்கள் என்பதாகும்.

இருள் நிறைந்த ஓர் இரவில் தந்தையும், மகளும் ஓர் காட்டின் பகுதியை கடந்தார்கள். இருள் பகுதிகள் முடிந்து வெளிச்சம் நிறைந்த பகுதிக்கு வந்தபோது தந்தை மகளிடம் இருள்நிறைந்த பகுதியை நாம் கடக்கும்போது பயந்துவிட்டாயா? என கேட்டார். மகள் இல்லையப்பா உங்கள் கைகள் என்னை இறுக பற்றிக்கொண்டு இருந்தபடியால் பயம் எனக்கு வரவில்லை என்றாள். கடவுள் நமது கரங்களை பிடித்துள்ளார் என்ற நம்பிக்கை நம்மில் காணப்பட்டால் இவ்வுலக வாழ்வில் எதற்கும் பயப்பட தேவை இல்லை என்பதனை உணர்வோம்.

சோம்பேறிகள் பயம் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறார்கள். ஒரு தாலந்தை வாங்கியவன் அதனை பயன்படுத்தாமல் சோம்பேறியாய், கவலையற்றவனாய் இருந்தான். எஜமானனின் குணங்களை விமர்சிக்கிறவனாக காணப்படுகிறான். தாலந்தை பயன்படுத்தாமல் புதைத்து வைக்க பயம் என்ற வார்த்தையை பயன்படுத்தி தப்பித்து கொள்ள பார்க்கிறான். ஆனால் எஜமான் அவனுக்கு தண்டனை கொடுக்கிறார்.

அநீதி நடக்கும்போது பயத்தினால் நம்முடைய வாழ்க்கையில் அமைதியாக இருப்போமானால் நீதி சாகடிக்கப்படும். நீதியை நிலை நாட்ட தைரியமாக பேச வேண்டும். பயந்து ஒதுங்கினால் நீதி அநீதியாக மாறும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

கோலியாத்தை எதிர்க்க இஸ்ரவேலர் ராணுவத்தினர் பயந்தார்கள். ஆனால் தாவீது எதிர்த்து வெற்றி பெறுகிறார். ஏனெனில் தாவீதுக்கு பயம் இல்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்ததால் வெற்றியும் பெற முடிந்தது.

பயம் நிறைந்த வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாய் அமையாது.

இயேசு சிலுவையின் பாடுகளைக் கண்டு பயப்படவில்லை. அதனை எதிர்கொண்டு உயிரை விடவும் துணிந்தார். அதனால் உலகம் மீட்கப்பட்டு, வாழ்வு பெற்றது. பிதாவுடன் ஐக்கியப்பட்டு வாழும் வாழ்வு மனித குலத்திற்கு கிடைத்தது.

அநீதியை நம்முடைய வாழ்வில், சமூக வாழ்வில், திருச்சபை வாழ்வில் நீக்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

அன்பின் கடவுளே! எங்களில் காணப்படும் பயம் உள்ள வாழ்வை நீக்கி எங்கள் தாலந்துகளை பிறருக்கு பயன்பட்டு உமக்கு பிரியமாக வாழ உதவி தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.