கலாத்தியர் 3 : 1-5                           04 நவம்பர் 2025, செவ்வாய்

“ஆவியில் தொடங்கிய நீங்கள் இப்பொழுது மாம்சத்தில் முடிக்கப் போகிறீர்களோ?” – கலாத்தியர் 3 : 3

தொடக்கம் அற்பமாக காணப்பட்டாலும் முடிவு மகிமையாக காணப்பட வேண்டும் என மக்கள் அனைவரும் விரும்பும் ஓரு நல்ல வார்த்தையாகும்.

ஒரு வீட்டை கட்டுகிறபோது அது அற்பமாக காணப்படும். அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு மிக நேர்த்தியாக அலங்கரிக்கிறபோது அதன் மதிப்பு பல மடங்காகக் காணப்படும்.

கிறிஸ்தவம் இன்று ஓரு மாய ஜாலம் காட்டும் கண்ணாடிபோல காணப்படுகிறது. விசுவாசத்துடன் வரும் விசுவாசிகள் தொடக்க காலத்தில் உறுதியான விசுவாசத்தில் காணப்பட்டாலும் தொடர்ந்து விசுவாச வாழ்வில் வாழாமல் உலக வாழ்வில் முடித்து கொள்கிறார்கள்.

இன்று கிறிஸ்துவை தங்கள் தேவைகளை கிடைக்க செய்யும் ஒருவர் போல நினைக்க தொடங்கி விட்டார்கள்.

கிறிஸ்துவின் சிலுவை வழியாக நமக்கு கிடைத்து இருக்கிற விலையில்லா மீட்பு, இரட்சிப்பு, வாய்மை, மேன்மை, சமாதானம், சந்தோஷம், விசுவாச வாழ்க்கை, பரிசுத்த வாழ்க்கை, கிருபையின் நாட்கள் இதற்கு மேலாக பிதாவோடு ஐக்கியப்பட்டு வாழும் வாழ்வு இவை அனைத்தையும் மறந்து போய் இருக்கிறோம்.

நம்முடைய முற்பிதாக்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்ட போது விசுவாச வாழ்வில் நிலைத்து இருந்தார்கள். ஆலயத்திற்கு செல்வார்கள், வீடுகளில் வேதம் வாசித்து ஜெபித்தார்கள், பிறருக்கு தீமை செய்யாத வாழ்வை மேற்கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாய் வாழ்ந்து மரித்தார்கள். இன்று அந்த விசுவாச வாழ்வு குறைவுபட்டு உள்ளது.

கிறிஸ்துவை இவ்வுலக வாழ்வக்காக மட்டும் நாம் ஏற்றுக் கொண்டு வாழ்வதால் எந்த பலனும் இல்லை. மரித்த பின் ஓரு வாழ்வு அவரோடு உள்ளது. அதற்காக, வாழும் காலம்வரை சாட்சியுள்ள வாழ்வு வாழும்படி அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

நம்முடைய குடும்பங்களில் குடும்ப ஜெபம், தனி ஜெபம், வேத வாசிப்பு, தினம்தோறும் நடைபெற வேண்டும். திருச்சபைகளில் நாம் முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காட்ட வேண்டும். கிறிஸ்துவின் உண்மையான பிள்ளைகள் என நம்மை சுற்றியுள்ள சமூகம் கூற வேண்டும்.

கிறிஸ்துவை தலையாகக் கொண்டு கடைசி வாழ்வு வரை ஆவியில் நடத்தப்பட்டு சாட்சியாய் வாழ ஆவியானவர் துணை புரியட்டும்.

அன்புள்ள கடவுளே! நீங்கள் எங்களில் வாழும் கடவுளாக இருக்கிறபடியால் எங்கள் சரீரங்களை பரிசுத்தமாக என்றும் காத்திட அருள்தாரும் இயேசுவில் பிதாவே, ஆமேன்.