மத்தேயு 16 : 9-11 02 நவம்பர் 2025, ஞாயிறு
“அம்மா ஏன் அழுகிறாய்?” – யோவான் 20 : 15
இயேசு உயிர்த்தெழுந்த பின் மரியாளிடம் கேட்கும் வார்த்தை ஏன் அழுகிறாய்?
அழுகையில் பலவகையுண்டு. குழந்தையின் அழுகை எதற்காக என்று தாய் அறிந்துகொண்டு பாலூட்டுகிறாள். சில குழந்தைகள் சில பொருள்களை அழுது பெற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம். நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் இழப்பினால் அழுகிறோம். மகிழ்ச்சியின் மிகுதியால் அழுகிறோம்.
இயேசுவும் லாசருவின் கல்லறையில் நின்று அழுதார் என வேதத்தில் வாசிக்கிறோம்.
யோசேப்பு சகோதரர்களிடம் தன்னை வெளிப்படுத்தியபோது அழுதார், ஆகார் தன் பிள்ளைக்காக அழுதாள், அன்னாள் பிள்ளை வேண்டி அழுதாள், பேதுரு மனங்கசந்து அழுதார் என்று வேதத்தில் பார்கிறோம்.
தியானப்பகுதியில் மரியாள் இயேசுவின் சரீரத்தை காணவில்லை என்று அழுகிறார். நாயீன் ஊர் வாலிபனை அடக்கம் செய்ய கொண்டு போகும்போது தாயாரின் அழுகையை இயேசு கண்டு மனம் உருகி வாலிபனை உயிரோடு எழுப்பி தாயாரின் கண்ணீரைத் துடைத்தார்.
திருமண வீட்டிற்கு செல்வதைவிட மரண வீட்டிற்கு செல்லுங்கள். தந்தை, தாயை இழந்து அழும் குழந்தைகள், குழந்தைகளை இழந்து கண்ணீர் வடிக்கும் பெற்றோர்கள் இவர்களுக்கு ஆறுதல் எங்கிருந்து கிடைக்கும். இவர்களின் கண்ணீரை துடைப்பதற்கு நாம் என்ன செய்துள்ளோம். நாம் சார்ந்த திருச்சபை என்ன செய்துகொண்டு இருக்கிறது என்பதனை எண்ணிப் பார்த்து அவர்களின் கண்ணீரை துடைக்க முன்வருவோம்.
தேசத்திற்காக, நீதிக்காக, பரிசுத்தத்திற்காக, நேர்மைக்காக அழ வேண்டும். நாம் துக்கமடைந்து அழும்போது மனிதர்கள் நம் துக்கத்ததை துடைக்க முன்வராமல் போகலாம். ஆனால் கடவுள் நம் துக்கத்தை துடைக்க வருகிறார். நாம் அழுவதற்காக இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. நாம் பாவத்தைவிட்டு மகிழ்ச்சியான வாழ்வு பெறவே மரித்து, உயிர்த்தெழுந்தார்.
அழுகையின் மூலம் ஓரு களிப்பு, மகிழ்ச்சி பிறக்க வேண்டும். இயேசு அழுதார், அதன் மூலமாக கடவுள் லாசருவை உயிரோடு எழும்ப செய்தார். அன்னாள் அழுதார், முதல் தீர்க்கதரிசியாய் சாமுவேல் பிறந்தார். தாவீது ராஜா அழுதார், பாவ மன்னிப்பை பெற்றார்.
நம் அழுகை பிறர் வாழ்வுக்காக மட்டுமே என்பதனை உணருவோம்.
அன்புள்ள இயேசுவே! நாங்கள் கண்ணீரின் பிள்ளைகளாய் அல்ல பிறர் அழுகையை துடைக்கிற மக்களாய் வாழ அருள் தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.
