மத்தேயு 7 : 24-27 27 அக்டோபர் 2025, திங்கள்
“கிறிஸ்துவின் நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டுமென்பதே என் பேராவல்.” – ரோமர் 15 : 21
கார்ல் கஸ்டவ் தியோடர் நேத்தர் என்ற மிஷினரி, ஜெர்மனியிலிருந்து தரங்கம்பாடியில் திருப்பணி செய்ய வந்தார். அங்கு ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் அங்கிருந்து வெளியேறினார். தாம் திருப்பணி செய்ய வேறொரு இடத்தை தேர்ந்தெடுக்க தீர்மானித்தார். அதற்காக சேலம் மாகாணத்தை தெரிந்து கொண்டார். கிருஷ்ணகிரியை மையமாகக் கொண்டு திருப்பணி தொடங்கினார். அப்பணி வளர்ந்து இன்றைக்கு இந்தியா முழுக்க திருச்சபைகளை உருவாக்கி மக்களுக்காகப் பணியாற்றி வருகிறது.
பல சிரமங்கள் இருந்தாலும் அவர் வெகுதூரம் கடந்து வந்ததற்கு ஒரு நோக்கம் உண்டு. ஏற்கனவே திருப்பணி நடைபெற்ற இடத்தில் பணி செய்யக்கூடாது. அங்கு இருக்கிற மக்களுக்கு தான் அறிமுகமாகி இருந்தாலும், அங்கே திருப்பணி செய்வது எளிதாக இருந்தாலும் வேறொரு பணி நடைபெறுகிற இடத்தில் தான் திருப்பணி செய்வதை அவர் விரும்பவில்லை. இதைத்தான் பவுலடிகளார் தம் திருப்பணியில் பின்பற்றினார். அப்போஸ்தலர்கள் திருப்பணி செய்துகொண்டிருந்த இடங்களை விட்டு புதிய இடங்களைத் தேடி போனார். அதைத்தான் ‘மற்றவனுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டாமல்’ என்று சொல்லுகிறார்.
இன்றைக்கு பல திருப்பணிகள் இந்தியாவில் பெருகிவிட்டது. ஆனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கிறது. ஏனென்றால் புதிய இடங்களை, புதிய மக்களை தற்கால திருப்பணி, தேடிச் செல்லவில்லை. ஏற்கனவே திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிற இடங்களில் சென்று அப்பணியை செய்வதுதான் அதிகரித்திருக்கிறது.
கிறிஸ்துவைப்பற்றி அறிவிக்கப்படாத இடங்கள் இன்னும் உண்டு. இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் இயேசுவோடு திருப்பணியில் இருந்தபோது, சீடரல்லாத ஒருவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிவித்துக் கொண்டிருந்தார். அவரைத்தடுக்கும்படி இயேசு ஆண்டவரிடம் கேட்டார்கள். இயேசு கிறிஸ்து அவரை தடுக்க வேண்டாம் என்று சொன்னார். அவரவர் பணியை அவரவர் செய்ய வேண்டும். திருப்பணியில் மட்டுமல்ல, எந்த பணியிலும் யாரையும் இடையூறு செய்யக்கூடாது. அதுவே வளர்ச்சியை கொடுக்கும்.
ஆற்றல் மிக்க கடவுளே, யாருக்கும் இடையூறு செய்யாமல் எங்கள் பணியை செய்ய வழிநடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
