2 சாமுவேல் 12 : 11 -15                                   22 அக்டோபர் 2025, புதன்

“நமது பாவங்களை அறிக்கையிட்டால்….. நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் நம்பத்தக்கவரும் நீதியுள்ளவருமாயிருக்கிறார்.”

– 1 யோவான் 1 : 9

சிறு பிள்ளைகளுக்கு இனிப்புகள் பிடிக்கும். வீடுகளில் பெற்றோர் குழந்தைகளுக்கு தெரியாமல் இனிப்புகளை மறைத்து வைப்பார்கள். சில வேளைகளில் குழந்தைகள் திருடி சாப்பிடுவார்கள். எளிதில் கண்டுபிடித்து விடுவோம். நீ சாப்பிட்டாயா என்று கேட்டால் உடனே இல்லை என்பர். சிறு குழந்தைகள்கூட தன் தவறை ஒப்புக் கொள்வதில்லை. பெரியவர்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. தன் தவறை மறைப்பார்கள். கண்டுபிடித்துவிட்டால் நியாயப்படுத்துவார்கள். மறந்தும்கூட தன் தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நமது தவறுகளை ஒப்புக்கொண்டு கடவுளிடம் அறிக்கையிடுவதில் உண்டாகும் நன்மைப்பற்றி, இன்றைய தியான வசனம் குறிப்பிடுகிறது.

இயேசு கிறிஸ்துவுக்கு 12 சீடர்கள். அதில் முக்கியமானவர் சீமோன் பேதுரு. மோசமானவர் யூதஸ்காரியோத். 30 வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்தார். சீமோன் பேதுரு தன் உயிருக்கு பயந்து இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். இருவரும் பாவம் செய்தார்கள். இருவரது பாவமும் பெரியதுதான். இயேசுவுக்கு விரோதமாக துரோகம் செய்தார்கள். ஆனால் பேதுரு தனது பாவங்களை உணர்ந்தார். அதற்காக மனம் கசந்து அழுதார். இயேசு அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டார். யூதாஸ் தன் பாவத்தை உணர்ந்தார், ஆனால் அறிக்கையிடவில்லை. மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் தன் வாழ்வை இழந்து போனார். பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று திருமறை கூறுகிறது.

நாமும்கூட நம்முடைய வாழ்வை சோதித்துப் பார்ப்போம். தவறுகளை ஒப்புக்கொண்டு கடவுளிடத்தில் அறிக்கையிட்டால் உடனே அவர் மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்வார். அதேபோல் நமக்கு எதிராக செயல்படுகிறவர்கள் இருப்பார்கள். அவர்கள் நம்மிடம் வருந்தி மன்னிப்பு கேட்டால், நாம் அவர்களை மன்னிக்க வேண்டும். ஏனெனில் மன்னிப்பதே கிறிஸ்தவ குணம். கிறிஸ்து நம்மை மன்னித்து ஏற்றுக் கொண்டதுபோல் நாமும் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொள்வோம்.

அன்பின் கடவுளே, நீர் எங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டதுபோல நாங்களும் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். சிலுவை நாயகர் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.