ஆதியாகமம் 32 : 27-29                                  13 அக்டோபர் 2025, திங்கள்

“நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தம்.” – யோவான் 1 : 42

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் பெயர்கள் உண்டு. பெயரில்லாமல் ஒருவருமில்லை. பெயர்கள்தான் நம்முடைய அடையாளம். ஆனால் பொதுவாக பெயருக்கும் வாழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதில்லை. யாராவது ஒருவரது பெயரை நினைத்துக் கொள்ளுங்கள். அவரது பெயருக்கும் வாழ்வுக்கும் தொடர்புள்ளதா என்று சிந்தித்து பாருங்கள். பொதுவாக இருக்காது. பெயர்கள் அடையாளங்கள்தானே தவிர நம் வாழ்வோடு தொடர்புடையவையல்ல.

ஆனால் திருமறையில் கடவுள் அநேகருக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார். அவர்கள் வாழ்வோடு தொடர்புள்ள பெயர்களை தந்துள்ளார். இந்த நாளுக்குரிய வாசிப்புப் பகுதியில் யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்று பெயர் கொடுத்தார். இஸ்ரவேல் என்றால் கடவுளின் மக்கள் என்று பொருள். அதேபோல் யாக்கோபின் பிள்ளைகளைதான் தமக்கு சொந்த பிள்ளைகளாக தெரிந்துகொண்டார். அவர்களே இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த நாளுக்குரிய தியான வசனத்தில் இயேசு சீமோன் என்பவரை சந்திக்கிறார். சீமோனின் சகோதரனாகிய அந்திரேயா அவரை இயேசுவிடம் அழைத்துவந்தார். இயேசு அவரை சந்தித்த மாத்திரத்தில், “நீ கேபா எனப்படுவாய்” என்றார். கேபா என்றால் பேதுரு என்று பொருள். பேதுரு என்றால் கற்பாறை என்று பொருள். இவரே இயேசுவின் முதன்மை சீடராக விளங்கினார். உண்மையில் இயேசு பேதுருவை சந்தித்தபோது ஒரு பாறையாகத்தான் இருந்தார். அதாவது, கல்வியறிவு அற்றவராக இருந்தார். நிலையற்ற மனிதராக இருந்தார். என்ன பேசுகிறோம் என்று தெரியாதவராக இருந்தார். ஆனால் இந்த கல்லின்மேல் சபையைக் கட்டுவேன் என்று இயேசு வாக்குறுதி தந்தார்.

அதேபோல், இயேசு மரித்து உயிர்த்தெழுந்து விண்ணிற்கு ஏறினபின், ஊழியத்தை துவங்கிய இயேசுவின் சீடர்கள் இஸ்ரவேல் தேசத்தை அசைத்தனர். குறிப்பாக பேதுருவின் பிரசங்கம் இஸ்ரவேலை அதிரச் செய்தது அவரது முதல் பிரசங்கத்தில் 3000 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். பாறையாக வந்த பேதுருவை திருச்சபையின் அடிக்கல்லாக மாற்றினார்.

தம்மிடம் வருகிற ஒவ்வொருவரையும் சிறப்பு மிக்கவர்களாக இயேசு மாற்றுகிறார். நீங்களும் தொடர்ந்து இயேசுவில் நம்பிக்கை வையுங்கள். உங்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வார். என்ன வாழ்க்கை இது என்று நீங்கள் கலங்கி இருக்கலாம். வாழவே பிடிக்கவில்லை என்று புலம்பி இருக்கலாம். மரித்துப் போனால் நலமாய் இருக்கும் என்றுகூட சிந்தித்திருக்கலாம். இயேசுவை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள். அப்பொழுது உறுதியான வாழ்வை அவர் தருவார். யாக்கோபின் வாழ்வை மாற்றியவர், சீமோனின் வழ்வை மாற்றியவர் உங்கள் வாழ்விலும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவார்.

அன்பின் பிதாவே, எங்கள் வாழ்வை பொருளுள்ளதாக மாற்றியருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.