எஸ்தர் 4 : 12-14                           21 செப்டம்பர் 2025, ஞாயிறு

“அவன் பேசியதெல்லாம் தன் குலத்தாரின் வாழ்வுக்கு ஏதுவாயிருந்தது.”– எஸ்தர் 10 : 3

தென் ஆப்பிரிக்காவின் முதல் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா. கறுப்பர் இன மக்களின் நேசிக்கப்பட்ட தலைவர். இன வேறுபாடு கூடாது, அனைவரும் சமம் என்று கறுப்பர் இன வேறுபாட்டிற்கு எதிராக போராடினார். தன் ஜனத்தின் விடுதலைக்காக பல ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தார். ஏழ்மை ஒழிக்க அயராது உழைத்தவர். தனது ஜனத்தின் விடுதலையே எனது விடுதலை என்று கூறியவர் நெல்சன் மண்டேலா.

தியானபாகத்தில், பாரசீகத்தில் வாழ்ந்த யூதனாகிய மொர்தெகாய் எவ்விதம் தமது ஜனமாகிய யூதர்களுக்கு நன்மை செய்தார் என்பதை குறிப்பிடுகிறது. அகாஸ்வேரு அரசாட்சின் கீழ் உயர் பதவி வகித்து வந்தார். மொர்தெகாயின் சித்தப்பா மகளாகிய எஸ்தர் அகஸ்வேரின் இராணியாக்கப்பட்டார். யூதர்களை அழிக்க ஆமான் சூழ்ச்சி செய்கிறான். இதை அறிந்த மொர்தெகாய் எஸ்தரைக் கொண்டு யூதர்களைக் காப்பாற்றுகிறார். அதோடு அகாஸ்வேரு அரசனின் நன்மதிப்பையும் பெறுகிறார். கடவுள் அவர்களுக்குக் கொடுத்த உயர்வை தம் ஜனத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தியவர்கள் மொர்தெகாயும், எஸ்தரும் ஆவார்கள்.

நாமும் கடவுளின் கிருபையை ஆண்டவர் இயேசுவின் வழியாக பெற்றுள்ளோம். நாம் விடுதலையாக்கப்பட்டவர்கள். கடவுள் நம்மை ஆசீர்வதித்துள்ளார். நாம் நன்மை பெற்றவர்கள். நன்மை பெற்ற நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்படியாக கடவுள் விரும்புகிறார். கிறிஸ்துவ வாழ்வின் சுருக்கமே கடவுளிடம் அன்புகூருதல், அயலானிடம் அன்புகூருதல் ஆகும். சுயநலத்தோடு வாழ்வது கிறிஸ்துவ வாழ்வு அல்ல. நன்மைச் செய்ய அறிந்தும் செய்யாமல் இருப்பது பாவம் என்று யாக்கோபு தமது நிருபத்தில் குறிப்பிடுகிறார். அயலானின் நலனில் அக்கறை கொள்வோம். கிறிஸ்துவின் சுவிஷேசத்திற்கு செயல் வடிவம் கொடுக்க தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, உமது அன்பை கிறிஸ்துவில் எங்களுக்குத் தந்ததற்காக நன்றி செலுத்துகிறோம். கிறிஸ்துவின் அன்பை அயலான் நலனில் அக்கறை கொண்டவர்களாக வெளிப்படுத்த எங்களுக்கு கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.