ஆதியாகமம் 19 : 15-26 20 செப்டம்பர் 2025, சனி
“உங்கள் கச்சைகளில்… வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரன்.” – மத்தேயு 10 : 9-10
கேரளாவில் வயநாட்டில் ஒரு மிகப்பெரிய நிலச்சரிவினால் ஏராளமானோர் தங்களின் வீடுகளை இழந்தார்கள். அநேகர் மரித்துப்போனர்கள். இவ்விதமாக தங்களின் உடைமைகளை இழந்தும், அன்பானவர்களை இழந்தும் தவித்த தவிப்பை நாம் அறிந்திருக்கிறோம். அதன்பின் அப்பகுதிகளில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது பல இடங்களில் பல கட்டுகள் பணமும், தங்க நகைகளும் கண்டு எடுக்கப்பட்டது. பரிதாபம் என்னவென்றால் இது யாருக்குரியது என்று தெரியாததால் அரசின் கைவசம் ஆனது. சேர்த்துவைத்தது உரியவருக்கு பயனற்றுப்போனது.
தியானபாகத்தில், ஆண்டவர் இயேசுவானவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் தெரிந்தெடுத்து, திருப்பணிக்கு அனுப்புகிறார். பன்னிருவரையும் அனுப்பும் பொழுது முக்கியமான அறிவுரைகளைச் சொல்லி அனுப்புகிறார். பொன், வெள்ளிக் காசுகளை உங்கள் கச்சைகளில் வைத்துக்கொள்ளாதிருங்கள் என்று குறிப்பிடுகிறார். கடவுளை முற்றிலும் சார்ந்திருங்கள். உலக பொருட்களை அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறார். தமது மலைப் பிரசங்கத்திலும் பூமியிலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழிக்கும். பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள் என்று குறிப்பிடுகிறார்.
இவ்வுலக வாழ்விற்கு பணம், பொருள் தேவை. ஆனால் அவைதான் வாழ்க்கை என்று இன்றைய மனிதர்கள் ஓடுகின்றனர். நம்முடைய வாழ்விற்கான ஆதாரம் கடவுள். அவர் நம் தேவைகளை எல்லாம் சந்திப்பார் என்று நம்பிக்கைக்கொள்ளாமல் வாழ்கின்றனர். பணம், பொருள் தேவையாக அல்ல, ஆசையாக – பேராசையாக மாறியுள்ளது. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராக இருக்கிறது என்று பவுல் சுட்டிக்காட்டுகிறார். பொருள் ஆசையினால் தனக்குக் கிடைத்த அற்புதமான வாழ்க்கையை இழந்த லோத்துவின் மனைவியை அறிவோம். கடவுள் இயேசுவில் நம்மை அவருடைய பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டு உள்ளார். நம்முடைய தேவைகளை எல்லாம் கடவுள் சந்திப்பார் என்று அவரையே சார்ந்து வாழ அர்ப்பணிப்போம்.
சகல ஆசீர்வாதத்திற்கும் ஆதாரமாகிய கடவுளே, நாங்கள் எல்லா நிலையிலும் உம்மையே சார்ந்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
