எபேசியர் 2 : 7-10 17 செப்டம்பர் 2025, புதன்
“நானே கடவுள், எனக்கு இணை இல்லை.” – ஏசாயா 45 : 22
கேரள மாநிலத்திலுள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச் சரிவு நமக்கு நினைவில் இருக்கும். நிலச் சரிவு, வெள்ளப் பெருக்கு என்ற நிலையில் துண்டிக்கப்பட்ட கிராமங்கள். மீட்புப் பணிச் செய்ய இயலாத நிலை. இந்நிலையில் இந்திய இராணுவ வீரர்கள் பலர் ஒன்றிணைந்து இரவு பகல் என்று பாராமல் துரிதமாக செயல்பட்டு தற்காலிகப் பாலத்தை அமைத்து, அநேகரை மீட்டார்கள். துண்டிக்கப்பட்ட கிராம மக்களின் ஒரே நம்பிக்கை அந்த பாலம்.
தியானபாகத்தில், பாபிலோனிய சிறையிருப்பில் இருந்த இஸ்ரவேல் மக்களின் இரட்சிப்பிற்கான ஒரே நம்பிக்கை கடவுள் என்பதை ஏசாயா தெளிவுப்படுத்துகிறார். நீண்டகால சிறையிருப்பு இஸ்ரவேல் மக்களை சோர்வடையச் செய்தது. பாபிலோனிய கடவுள்களை வணங்கலாம் என்ற சோதனைக்கு ஆளானார்கள். இந்நிலையில் கடவுளே அவர்களுக்கு விடுதலையின் வாழ்வைத் தரக்கூடியவர். அவரே இரட்சகர். அவருக்கு நிகர் வேறு தெய்வங்கள் இல்லை என்பதை ஏசாயா சுட்டிக்காட்டுகிறார். கடவுள் ஒருவரே, அவர் நீதியின் கடவுள். அவரே இரட்சிக்கிறவர். அவரே உங்கள் நம்பிக்கை. சிறையிருப்பின் விடுதலை அவராலே என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
இன்றைய உலகில் மானிட மீட்பைத் தேடி ஆன்மீகம் என்ற பெயரில் பல முயற்சிகளை மேற்கொண்டுவருவது நாம் அறிந்ததே. மானிட மீட்பிற்கு என்று கடவுளால் அனுப்பப்பட்டவர் இயேசு. அவரால் மட்டுமே இரட்சிப்பு- பாவ விமோசனம். இயேசுவின் சிலுவை மரணத்தின் வழியாக இரட்சிப்பு இன்றும் இலவசமாய் கொடுக்கப்படுகிறது. ஆண்டவர் இயேசுவை விசுவாசிப்பதினால் கடவுள் இரட்சிப்பை இலவசமாகத் தருகிறார்.
இலவசமான இரட்சிப்பை நீங்களும் நானும் இயேசுவில் அவரின் திருவார்த்தையின் வழியாக பெற்று இருக்கிறோம். பெற்றுக்கொண்ட புதிய வாழ்வை மற்றவருடன் பகிர்ந்துகொள்வோம். இரட்சணிய சந்தோஷத்தில் நிலைத்திருப்போம்.
கிருபையுள்ள கடவுளே, உமது பேரன்பினால் சொந்த குமாரன் இயேசுவின் வழியாக இரட்சிப்பைத் தந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இரட்சணிய சந்தோஷத்தில் நிலைத்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
