1 பேதுரு 1 : 17-21                              16 செப்டம்பர் 2025, செவ்வாய்

“…அவனைத் தப்பவிட்டவன் ஜீவன் ஈடாகும் என்றான்.” – 2 இராஜாக்கள் 10 : 24

கள்ளக்குறிச்சியில் 30 பேர் கள்ள சாராயம் குடித்து பலி! என்ற செய்தி தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் பரபரப்பாக பேசப்பட்டதை நாம் அறிவோம். இச்சம்பவத்தின் எதிரொலியாக சரியான கண்காணிப்பு இல்லை. தடுப்பு நடவடிக்கை எடுக்க தவறிய காவல் அதிகாரிகள், அரசுத் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பலர் இடமாற்றம் பெற்றனர். உயிரிழப்பிற்குக் காரணம் அதிகாரிகளின் கவனக்குறைவே.

தியானபாகத்தில், யேகூ, ஆகாப் வழியாக பரவிக்கிடந்த பாகால் தீர்க்கர்களையும், பாகாலின் பக்தர்களையும் முழுமையாக அழித்திட விரும்பினார். அதற்கு தான் பாகாலின் பக்தி வைராக்கியம் கொண்ட எல்லோரையும் ஒரு இடத்தில் கூட்டுகிறார். அந்த இடத்தில் இருந்து பாகாலின் ஆட்கள் தப்பித்துப் போகாதபடி ஆட்களை நிறுத்தி அவர்களிடம் சொன்ன வார்த்தை: ‘உங்கள் கவனக்குறைவினால் ஒருவன் தப்பித்தாலும் அதற்கு இணையாக உங்கள் ஜீவன் எடுக்கப்படும்’ என்று உத்தரவுபோடுகிறார். கடவுளுக்கு பக்தி வைராக்கியத்தோடு யேகூ நடந்துக்கொண்டார்.

நாமும் முன்னே நமது அக்கிரமங்களினாலும் பாவத்தினாலும் ஜீவன் அற்று இருந்தோம். நமது ஜீவனை மீட்டுக்கொள்ளும்படி கடவுள் தமது குமாரனாம் இயேசுவின் ஜீவனை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார். பொன்னினாலும் அல்ல, வெள்ளியானாலும் அல்ல, விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை மீட்டுக் கொண்டு நமது ஜீவனை இரட்சித்தார்.

நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கில் கடவுள் இயேசுவில் நம்மை மீட்டுக் கொண்டார். நாம் கடவுளின் பிள்ளை என்கிற அடையாளத்தைப் பெற்றுக்கொண்டோம். தொடர்ந்து கடவுளின் பிள்ளையாய் பக்தி வைராக்கியத்துடன் வாழ தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, உமது குமாரன் இயேசுவின் இரத்தத்தினால் எங்களை மீட்டுக்கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் உம்முடைய பிள்ளைகளாய் பக்தி வைராக்கியத்துடன் வாழ கிருபை செய்தருளும், ஆமேன்.