மார்க்கு 4 : 35-41 13 செப்டம்பர் 2025, சனி
“உங்களுக்கு ஏன் இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றார்.” – மார்க்கு 4 : 40
பயம் என்பது எல்லா மனிதருக்கும் ஏற்படுகின்ற ஒர் உணர்வு. எதிர்காலத்தைக் குறித்த பயம், தேவைகள் நினைத்து பயம், மரண பயம் போன்றவைகள் நம்முடைய வாழ்வில் வந்து போகக்கூடிய பயங்கள். பயம் ஒருவரின் அவநம்பிக்கையின் வெளிப்பாடு. பயம் நம்மோடு இருக்கிறவைகளையும், இருக்கிறவரையும் மறக்க செய்யும். உளவியல் நிபுணர்கள் ஒரு மனிதரின் வாழ்வில் ஏற்படுகின்ற 70 சதவீத பயங்கள் அவசியமற்றது என்று குறிப்பிடுகிறார்கள்.
தியானபாகத்தில், இயேசுவின் சீடர்களின் பய அனுபவத்தை பற்றி சொல்லப்பட்டுள்ளது. இயேசுவும் சீடர்களும் ஒருநாள் படகில் ஏறிப் போனார்கள். இயேசு கீழ்தட்டில் இருந்தார். படகு போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று பலத்த சுழல் காற்று உண்டானது. அலைகள் படகின் மேல் மோதவே, சீடர்களுக்கு மரணபயம் உண்டாயிற்று. ஆண்டவர் உடன் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்பதற்கு பதிலாக அவரை சீடர்கள், ‘நாங்கள் மடிந்து போகிறோம், உமக்கு கவலை இல்லையா’ என்று கடிந்துக்கொள்கிறார்கள். அவரோ அவர்களிடம் ஏன் பயப்படுகிறீர்கள், இன்னும் நம்பிக்கை வரவில்லையா என்று கூறி, காற்றையும் கடலையும் அதட்டினார். அமைதலுண்டாயிற்று. இயற்கையின் மேல் அதிகாரம் உடைய ஆண்டவராகத் தம்மை வெளிப்படுத்தினார்.
நம்மை பயத்தினின்று விடுதலையாக்க வந்தவர் நமது ஆண்டவர் இயேசு. இன்றும் நம்மோடுகூட இருக்கிறார். நம் வாழ்கைப் பயணத்தில் நமது துணையாக இருக்கிறார்.
நமது சூழ்நிலைகள், எதிர்பார்ப்புகள் மத்தியில் நம்மோடு இருக்கின்ற இயேசுவை மறந்துபோகின்றோம். சீடர்களைப்போல் கலங்கி நிற்கிறோம், கவலைப்படுகிறோம், பயந்துபோகிறோம். ஆண்டவர், “பயப்படாதிருங்கள், நான்தான்” என்று தமது வார்த்தையினால் நம்மை சந்திக்கிறார், தைரியப்படுத்துகிறார். அவ்விதம் பயமின்றி ஆண்டவரில் நம்பிக்கைக்கொண்டு வாழ தூயாவியானவர் துணை செய்வார்.
அன்பின் கடவுளே, ஆபத்து காலத்தில் எப்பொழுதும் எங்கள் வாழ்வில் இருக்கிறீர் என்று இயேசுவில் நம்பிக்கைக்கொண்டு வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
