உபாகமம் 30 : 15-20 12 செப்டம்பர் 2025, வெள்ளி
“நீ அவைகளை வணங்கவும் சேவிக்கவும் வேண்டாம் ….. ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ் செய்கிறவராய் இருக்கிறேன்.”
– யாத்திராகமம் 20 : 5-6
இன்றைய உலகின் இரக்க குணம் அலைபேசியோடு முடிந்து போகிறது என்ற வாசகத்தை வாசிக்க நேர்ந்தது. ஆம், உண்மைதான். ஆபத்து- விபத்து எதுவானாலும் அலைபேசியில் படம்பிடித்து முகநூலில் பதிவுசெய்து லைக் வாங்கும் வரைதான் இரக்ககுணம். சுயநலம் மிஞ்சிய வாழ்க்கை இன்றைய வாழ்க்கைமுறை.
தியானபாகத்தில், கடவுள் இரக்ககுணமுள்ளவர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கடவுளிடம் அன்புகூர்ந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்யக்கூடியவராக இருக்கிறார்.
ஆதாமின் பாவத்தின் நிமித்தம் கெட்டுபோய் சபிக்கப்பட்ட மனுக்குலத்தின் மேல் கடவுள் இரக்கம் கொண்டார். தமது ஒரே பேறான குமாரன் இயேசுவை அனுப்பினார். ஆண்டவர் இயேசு கடவுளின் இரக்கத்தையும், அன்பையும் தமது சிலுவை மரணத்தின் வழியாக வெளிப்படுத்தினார். இயேசுவை விசுவாசிப்பதன் வழியாக கடவுள் தமது இரக்கத்தை நமக்கு இலவசமாய் தருகிறார். கடவுளின் இரக்கத்தின் வழியாக நாம் கடவுளின் பிள்ளைகளாய் ஏற்றுக்கொள்படுகிறோம்.
கடவுள் தமது இரக்கத்தை இயேசுவின் வார்த்தையிலும் சாக்கிரமெந்திலும் வெளிப்படுத்துகிறார். மனம் திருந்திய மகனுக்கு இரக்கம் காட்ட தந்தை எப்படி காத்துக்கொண்டிருந்தாரோ, அதேபோல் இன்றும் நமக்கு இரக்கம் காட்ட கடவுள் காத்துக்கொண்டுள்ளார். திரும்புவோம், அவரில் மாத்திரம் அன்புகூர்ந்து அவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ அர்ப்பணிப்போமாக. அவ்விதம் அர்ப்பணித்து வாழ தூயாவியானவர் நமக்கு துணை செய்வார்.
இரக்கமுள்ள கடவுளே, உம்மில் அன்புகூர்ந்து உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
