ரோமர் 6 : 2-11 09 செப்டம்பர் 2025, செவ்வாய்
“நாம் அவரோடுகூட மரித்தால் அவரோடுகூட பிழைத்துமிருப்போம்.” – 2 தீமோத்தேயு 2 : 11
ஒருவர் இருதய அறுவை சிகிச்சை முடிந்து வந்தார். அவரைப் பார்த்து ஜெபிக்கச் சென்றபோது, ‘ஐயா நான் செத்து பிழைத்தவன்’ என்று அவர் கூறும்போது மறுவாழ்வு பெற்ற மகிழ்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது.
தியானபாகத்தில் பவுல் ஆன்மீக வாழ்வில் ஒருவர் கிறிஸ்துவில் செத்து பிழைத்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார். ஒருவர் தான் பெற்றுக்கொள்ளும் திருமுழுக்கில், கிறிஸ்துவோடு தமது பாவ சரீரத்தில் மரித்து கிறிஸ்துவோடு எழுப்பப்படுகிறார், கிறிஸ்துவோடு பிழைக்கிறார். கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவராய் புதிய அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுகிறார். ரோமர் நிருபத்தில், பவுல் திருமுழுக்கில் ஒருவருடைய வாழ்வில் நடைபெறும் அற்புத செயலை இவ்விதமாக குறிப்பிடுகிறார். ஒருவர் திருமுழுக்கில், தமது பாவ சரீரம் கிறிஸ்துவின் மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டு, அவரோடு அடக்கம்பண்ணப்பட்டு, அவரோடு எழுப்பப்படுகிறார். திருமுழுக்கில் ஒருவர் இவ்விதமாய் செத்து பிழைக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறார்.
கிறிஸ்துவ வாழ்வு என்பது பாவத்திற்கு செத்து, நீதிக்கு-கிறிஸ்துவுக்குள் பிழைத்திருப்பதாகும். நாம் அவரோடுகூட பிழைத்திருக்கிறோம் புதிய படைப்பாய் இருக்கிறோம். பழைய பாவ சரீரம் இல்லை. திருமுழுக்கில் பாவ சரீரத்தோடு சிலுவையில் நாமும் அறையப்பட்டோம். எனவே இனி கிறிஸ்துவுக்குள் மரித்தவன் பாவத்திற்கு கடன்பட்டவனல்ல. கடவுளின் பிள்ளை, கிறிஸ்தவர் என்ற அடையாளத்தைப் பெற்றுக்கொண்டோம்.
இன்று பரபரப்பான இவ்வுலக வாழ்வில் நம்முடைய அடையாளத்தைத் தொலைத்துப்போடுகிறோம். கடவுள் கிறிஸ்துவில் நம்மேல் கொண்ட அன்பின் நிமித்தம் கிறிஸ்துவின் மெய்யான சரீரத்திலும், மெய்யான இரத்தத்திலும் நம்முடைய பாவங்களை மன்னித்து, நமது அடையாளத்தைப் புதுப்பிக்கிறார். எனவே, கிறிஸ்துவில் நமது வாழ்வு, நாம் அவரில் பிழைத்திருக்கிறோம் என்று உணர்ந்து வாழ தூயாவியானவர் துணை செய்வார்.
கிருபையுள்ள கடவுளே, உமது குமாரனில் எங்களை புதிய படைப்பாய் ஏற்றுக்கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் கிறிஸ்துவில் பிழைத்திருக்க உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
