யாத்திராகமம் 34 : 2-4                      11 ஜூன் 2025, புதன்

“கர்த்தாவே அதிகாலையில் என் சத்தத்தைக் கேட்பீர், அதிகாலையிலே உமக்கென்று ஆயத்தமாய்க் காத்திருப்பேன்.”

– சங்கீதம் 5 : 3

அதிகாலையில் எழுந்திருப்பது என்பது சிறந்த நற்பண்புகளில் ஒன்று. அதிகாலை தியானம் என்பது அநேக நன்மைகளை கொண்டு வருகின்றது. ஆண்டவரோடு துவங்குகிற நாளில் அதைச் சந்திக்கும் பலம் அவரிடமிருந்தே கிடைக்கிறது.

இன்றைய தியானப் பகுதியிலும் கர்த்தரை அதிகாலையில் தேடும்படியாய் சங்கீதக்காரர் நம்மை அழைக்கிறார். அதிகாலையில் அவர் நமது சத்தத்தை கேட்கிறார். காலையில் தேடுவோர் என்னைக் கண்டடைவார்கள். காலைக்கு காலை நம்மை புது கிருபைகளால் நிரப்புகிறார் என்று திருமறை கூறுகிறது.

வாசிப்புப் பகுதியில் ஆண்டவர் மோசேயிடம் விடியற்காலத்திலே ஆயத்தமாகி சீனாய் மலை உச்சியில் அதிகாலமே காத்திருக்க அழைக்கிறார். மோசே அதிகாலையிலே ஆயத்தமாகி அங்கு காத்திருந்தார். அவர் இறைவனுடைய தரிசனத்தை கண்டு கொண்டார். கர்த்தர் இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகாதயவும் சத்தியமும் உள்ள கடவுள் என்பதை உணர்ந்தார். மோசே இஸ்ரவேலை வழிநடத்தும் ஆற்றலை கடவுளிடம் பெற்றுக்கொண்டார்.

உலகத்தின் இரட்சகராக தம்மையே ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவும் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு வனாந்தரமான ஓரிடத்திற்கு போய் அங்கே ஜெபம் பண்ணினார். ஒவ்வொரு பட்டணங்களுக்கும் செல்வதற்கு முன்பாக அதிகாலையில் ஜெபம் செய்தார் என்று பார்க்கிறோம். அது கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்ள காரணமாய் அமைந்தது.

நோய்களை குணமாக்க; பேய்களை துரத்த; துயரத்தில் இருப்பவருக்கு விடுதலை கொடுக்க; கண்ணீர் வடிப்போருக்கு ஆறுதல் கொடுக்க; அதிகாலை ஜெபத்தின் வழியாய் தம்மை ஆயத்தப்படுத்தினார். நம்முடைய வாழ்விலும் தீர்மானம் செய்து நம்முடைய வாழ்வும் குடும்பமும் பலப்பட நம்முடைய தேசம் மீட்பை கண்டடைய அதிகாலையில் கடவுளை தேடுவோம். கடவுள் நமக்கு பதில் தருவார். நம்முடைய வாழ்வும் அநேக மக்களுக்கு சாட்சியாய் மாறும்.

காலைதோறும் புதுப் புது கிருபைகளால் நிறைத்து வழிநடத்துகிற அன்பின் நல்ல கடவுளே! நாங்கள் அதிகாலையில் ஜெபத்தில் உம் ஆற்றலை பெற்று, அதன் வழியாய் நிலையான அமைதியைப் பெற்றுக் கொள்ளவும் துணை புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.