ஒசேயா 14 : 1-7 09 ஜூன் 2025, திங்கள்
“வெளியே போய், மனங்கசந்து அழுதான்.” – மத்தேயு 26 : 75
இவ்வுலகில் எடைமிக்க பொருட்களில் ஒன்று கண்ணீர். கண்ணீருக்கு எடை அதிகம். அதிலும் மனம் கசந்து அழுகிறதினால் வரும் கண்ணீர் அதிகம் எடை உடையது. கண்ணீர் தோல்வியின் அடையாளம் அல்ல, அவமானத்தின் அடையாளம் அல்ல, கண்ணீர் சிந்துகிறவர் கோழையும் அல்ல. கண்ணீர் மகிழ்ச்சியின் அடையாளம்; மனம் திரும்புதலின் அடையாளம்; மன்னிப்பின் அடையாளம்; புலம்பலின் அடையாளம்; என்று பல வகைகளில் கூறலாம். கண்ணீர் சிந்துதல் அறிவியல் ரீதியாகவும் பல நன்மைகளை கொண்டு வருகின்றது, ஆறுதல் கொடுக்கிறது, வலிகளை குறைக்கிறது, அன்பை கூட்டுகிறது. கண்ணீர் இத்தகைய ஆற்றல் கொண்டது.
இன்றைய தியானப் பகுதியில், பேதுரு மனம் கசந்து அழுதான் என்று பார்க்கிறோம். தனது வாழ்வில் தோற்றுப்போனதை எண்ணி தனது இரட்சகரை, மறுதலித்ததை எண்ணி தனது இரட்சகர் தன்னை ஏக்கத்தோடு பார்க்கின்றபோது மனம் கசந்து அழுதான். பேதுருவின் அழுகை அவனை விசுவாசத்தில் பலப்படுத்தியது. தான் பாவி என்பதை உணர்ந்து அழுதான். தான் தன் வாழ்வில் செய்த தீமைக்காய் மனம் வருந்தி அழுதான். தான் வீழ்ந்து போனதை எண்ணி அழுது ஆண்டவரை நோக்கிப் பார்த்தான். ஆண்டவர் அவனை பயன்படுத்தினார். ஆண்டவருக்காய் உழைக்கும் பாக்கியம் பெற்றான்.
யூதாஸ் ஆண்டவரை காட்டிக் கொடுத்தான். ஆனால் தன் தவறை உணர்வதற்கோ, தன்னை அரவணைக்கிற, தன் பாவத்தை மன்னிக்கிற ஆண்டவரை நோக்கி பார்ப்பதற்கோ மனமற்று இருந்தான். தன் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து மரித்தான் என்று பார்க்கின்றோம். உள்ளத்தின் கவலைகளும் ஏமாற்றங்களும் அவனை அழுத்தி பயத்தால் தன்னையே மாய்த்துக் கொண்டான். பேதுருவோ ஆண்டவரிடம் வந்தான். தன் பிழை உணர்ந்து அழுதான், வாழ்வைப் பெற்றுக் கொண்டான்.
அழுகை வெற்றியைத் தரும். அன்னாள் ஆலயத்தில் அழுதாள், சாமுவேல் பிறந்தார். எசேக்கியா அறை வீட்டில் அழுதார், 15 வருட ஆயுளை நீடித்து பெற்றார். பாவியாகிய பெண் இயேசுவின் பாதத்தில் அழுதார், பாவமன்னிப்பை பெற்றார். நம் கண்ணீரை அவரது துருத்தியில் வைத்திருக்கிறார், நிச்சயம் அதற்கு பதில் தருவார் என்று வசனம் கூறுகிறது. இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள், இனி நகைப்பீர்கள் என்று திருமறை கூறுகிறது.
நம்முடைய வாழ்வின் புலம்பல்களை, நமது பாரங்களை, நமது அக்கிரமங்களை, அழுகையோடு ஆண்டவரிடம் அறிக்கை செய்வோம். நம்மைப்போன்று துன்பத்தில் இருப்பவருக்கு, மனம் கசந்து அழுகிறவர்களுக்கு அழாதீர்கள் என்று சொல்லி கண்ணீரைத் துடைத்து ஆண்டவர் தேற்றினதுபோல, ஆறுதலாய் இருப்போம். நம்முடைய வாழ்வினூடாய் பிறர் கண்ணீர் சிந்துவதற்கு காரணமாகாதிருப்போம்.
எங்கள் விண்ணப்பத்தை கேட்கிறவரே! கண்ணீரை காண்கிறவரே பாவங்களையும் இயலாமையையும் எண்ணி மனம் கசந்து அழுகின்ற யாவருக்கும் ஆறுதல் சொல்லவும் பிறர் கண்ணீர் சிந்துவதற்கு காரணமாகாது வாழவும் துணை செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.