யோசுவா 1 : 1-9 22 மே 2023, திங்கள்
“துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.”
– 2 கொரிந்தியர் 4 : 9
இந்த ஆண்டு நடைபெற்ற, மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், மாரியப்பன் என்ற தமிழர் தங்கம் வென்று இந்தியாவையே பெருமையடைய வைத்தார். உடனே நமது முதல்வர் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார். ஒட்டு மொத்த ஊடகத்துறையும் அவர் வீட்டு வாசலில் நின்றது. மாரியப்பனின் தாயார் ஆனந்த கண்ணீரோடு கூறியது, “என் மகனுக்கு 5 வயதாய் இருக்கும்போது ஒரு விபத்தில் அவன் கால் பாதிக்கப்பட்டது, அவனுடைய அப்பாவும் ஒரு சில ஆண்டுகளில் எங்களை விட்டு போய்விட்டார். என்னால் குடும்பத்தை நடத்த முடியாமல் பெரிதும் கஷ்டப்பட்டேன். எனவே மகனை அழைத்து இருவரும் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றேன். அப்போது அவன் வேண்டாம்மா, சனி ஞாயிறுகளில் நான் வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன் என்று கூறி என்னை தேற்றினான். இன்று சாதித்து விட்டான்” என்றார்கள்.
எந்த ஒரு சாதனையாளரும், சங்கடங்களையும், துன்பங்களையும், பெரிய சோதனைகளையும் சந்திக்காமல் சாதனையாளர்களாய் உருவானதில்லை. வேதத்தில் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒருவர் எலியா தீர்க்கதரிசி. 1 ராஜாக்கள்19:4-ல் ‘போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும், தான் சாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.’ வாழ்வை வெறுத்து, தன் போராட்டங்களால் நலிவடைந்து, யாரும் தன்னோடு இணைந்து போராடாததையும், யாரும் தன்னை ஆதரிக்காததையும் எண்ணி, மன உளைச்சாலாலும், மன அழுத்தத்தாலும் இந்த வேண்டுதலை முன் வைக்கிறார். இதை 19-ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.
ஆனால் கடவுளோ, ஒரு தேவ தூதனை அனுப்பி, அவரை எழுப்பி, அவனுக்கு உணவை கொடுத்து, மீண்டும் அவன் பயணத்தை துவக்கி வைத்தார். ஆம் நாம் எப்போதெல்லாம் வஞ்சிக்கப்பட்டு, துன்பப்பட்டு தனிமையில் நிற்கிறோமோ, அப்போதெல்லாம், சர்வ வல்லவர் நம் பக்கத்தில் நிற்கிறார், அதைதான் பவுல், நாங்கள் துன்பப்படுத்தப்பட்டும், கை விடப்படுகிறதில்லை என்று கூறுகிறார். ஆம் யார் நம்மை கை விட்டாலும் நம்மை சேர்த்துக் கொள்ளும் சர்வவல்லவர் நம்மோடு இருக்கிறார். தைரியமாக இருங்கள். உங்களை அழைத்த கடவுள் கிறிஸ்துவின் வழியே மீட்டுக் கொண்ட கடவுள் உங்களை கைவிடமாட்டார்.
அன்பின் தந்தையே, எந்த துன்பத்திலும் எங்களை கைவிடாமல் காத்துக் கொள்ளும். இயேசுவின் வழியே ஜெபிக்கிறோம். பிதாவே ஆமேன்.