ஏசாயா 63 : 7-9 08 மே 2022, ஞாயிறு
“கர்த்தரே கடவுளென்று அறிந்துகொள்ளுங்கள்;” – சங்கீதம் 100 : 3
இன்றைய தியான பகுதியில் சங்கீதக்காரன் இரண்டு விதமான சத்தியங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று, நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது எது. இரண்டு நமது அடையாளம் என்ன என்பதைக் குறிப்பிடுகிறார்.
நாம் கர்த்தரே கடவுள் என்று அறிந்துக்கொள்ள வேண்டும் . இந்த கர்த்தரே இஸ்ரவேலின் கடவுளாக: ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ என்று மோசேக்கு வெளிப்படுத்தினார். இவரே இஸ்ரவேல் ஜனத்தை தமது புய பலத்தினால் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை ஆக்கினார்.
இஸ்ரவேல் மக்களை விடுதலை ஆக்கின அதே கடவுள் தமது அன்பை முழு மனுகுலத்திற்கும் வெளிப்படுத்தப் பிரியம்கொண்டார். இயேசுகிறிஸ்துவில் அதை வெளிப்படுத்தினார். கடவுள், இயேசுவில் மனிதனாக வந்தார். இயேசுதாமே, யோவான் 8:58b இல் ‘ஆபிரகாம் பிறக்கும் முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்’ என்று குறிப்பிடுகிறார். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து எவ்வாறு விடுவிக்கப்பட்டனரோ, அதே போல் இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் நாம் மரணத்தில் இருந்து விடுதலைப் பெற்றோம். இந்த சத்தியத்தை அறிந்துகொள்ளவேண்டும். கடவுளை இயேசுவில் அறிந்துக்கொள்தல் அவசியம் ஆகும். அறிந்துக்கொள்தல் என்பது இயேசுவில் கடவுளோடு நல்லுறவில் நிலைத்திருப்பதே. தொடர்ந்து சங்கீதக்காரன் நமது அடையாளத்தைச் சுட்டிக்காட்டுகிறார். நாம் கடவுளின் மந்தைகள் – மேய்ச்சலின் ஜனம் என்று குறிப்பிடுகிறார். அதாவது இயேசுவில் நாம் கடவுளால் வழிநடத்தப்படும் ஜனம் என்பதை நினைவுபடுத்துகிறார்.இயேசுகிறிஸ்துவே நமது நல்ல மேய்ப்பனாக இருக்கிறார். நமக்காக ஜீவனைத் தந்த மேய்ப்பன். (யோவான் 10:11ல் வாசிக்க)
கர்த்தரே கடவுள் என்று இயேசுகிறிஸ்துவில் அறிந்து கொண்ட நாம் என்ன செய்ய வேண்டும்? மகிழ்ச்சியோடு கெம்பீரமாய் கடவுளை புகழ்ந்து பாடஅழைக்கப்படுகிறோம். அவ்வாறு புகழ்ந்து பாடி நமது அடையாளத்தை வெளிப்படுத்துவோம்.
இறைவா! நாங்கள் உம்மை கிறிஸ்துவில் அறிந்துக்கொள்ளவும், தொடர்ந்து நாங்கள் பெற்றுக்கொண்ட அடையாளத்தை உணர்ந்து உம்மை துதித்து வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.