லூக்கா 24 : 25-28 09 ஏப்ரல் 2021, வெள்ளி
“ஏன் கலங்குகிறீர்கள்? … சந்தேகம் பிறப்பதென்ன? … என்னைத் தொட்டுப் பாருங்கள்;” – லூக்கா 24 : 39
பொருட்களைத் தொட்டுப் பார்த்து, தெரிவு செய்வதில் நமக்கு மனதில் ஒரு திருப்தி தோன்றுகிறது. குறிப்பாக, பெண்கள் ஒரு சேலை எடுக்க வேண்டுமென்றாலும் சேலையின் துணியை, அதன் கீழ் மேல்புற கரைகளை, முந்தானைப் பகுதியை தொட்டு தடவிப் பார்ப்பார்கள். அனேக காரியங்களில் தொட்டறிவு என்பது பட்டறிவு என்றாகிறது.
இயேசு உயிர்த்தெழுந்தார்! சிலர் பார்த்தார்கள்! தேவ தூதர் சொன்னார்கள்! பெண்கள் சொன்னார்கள். ஆனாலும் சீடர்கள் இயேசு உயிர்த்தார் என்று நம்பவில்லை. இயேசு தண்ணீர் மேல் நடந்து வந்த பொழுது ‘ஆவேசம்’ (ஆவி-பேய்) என்று பயந்தவர்கள் சீடர்கள். அவர்கள் நடுவில் இயேசு வந்து நின்று ‘உங்களுக்குச் சமாதானம்’ என்றார். சீடருக்குச் சந்தோஷம் வரவில்லை, சந்தேகம்தான் வந்தது. இயேசு மாதிரி ஏதோ ஒன்று வந்து நிற்கிறதோ என்று நினைத்தனர். ஆகவே இயேசு, ‘கலங்க வேண்டாம். நான்தான், என்னைத் தொடுங்கள். என் கை காலைப் பாருங்கள்’ …என்று சொன்னார். அப்படியும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆகவே, அவர்கள் கொடுத்த சமைத்த மீன் துண்டைச் சாப்பிட்டார். இயேசுவின் பிறப்பு, வாழ்வு, பாடு, மரணம், உயிர்ப்பு எல்லாமே மீட்பின், உலக இரட்சண்யத்திற்குத் தேவையான நிகழ்வுகள். இயேசு பிறப்பதற்கு முன்பே இவை முன் குறிக்கப்பட்டன. சீடர்கள் இதை நம்பவில்லை. இயேசுவும் தனது மரணம் உயிர்ப்பு பற்றிக் கூறினார். இதையும் சீடர்கள் நம்பவில்லை. இப்பொழுது இயேசுவே அவர்கள் முன் வந்து நின்று தொட்டறியுங்கள் என்றார். சீஷர் இதைக் கூட நம்பத் தயங்கினர். இயேசுவை முகமுகமாய்க் கண்ட பின்பும் சீடரால் நம்ப முடியவில்லை! நாம் இயேசுவை நேரில் காணாமலே நம்புகிறோமே! நாம்தான் பேறு பெற்றவர்கள்! பாக்கியசாலிகள்.
விசுவாசக் காரணரே! பலவீன விசுவாசிகளாகிய எமது விசுவாசத்தைப் பலப்படுத்தியருளும். உயிர்த்த எமது மீட்பர் இயேசுவின் வழியே ஆமேன்.