ஏசாயா 25 : 6-9 01 ஏப்ரல் 2021, வியாழன்
“இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்.” – லூக்கா 22 : 19
இஸ்ரவேலரின் வரலாற்றில் பலிகள் முக்கிய இடம் பிடித்திருந்தன. மக்கள் ஒருவருக்கொருவர் உடன்படிக்கை செய்து கொள்ளும் போது சாட்சியாக பலியிட்டார்கள். பின்பு பலியிட்ட மிருகத்தை சமைத்து புசித்தார்கள். இதற்குப் பலிவிருந்து எனப்பட்டது. எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற இரவு ஆட்டுக்குட்டியை பலியிட்டார்கள். இரத்தத்தை கதவின் நிலைக்கால்களில் பூசினார்கள். அந்த ஆட்டின் மாம்சத்தை சமைத்து புசித்தார்கள். இதற்கு பஸ்கா பலி விருந்து என்று பெயர். நாம் வாசித்த பகுதியில் கடவுள் சீயோன் மலையில் நடத்தும் பலிவிருந்தை சுட்டிக்காட்டுகிறார். இந்த விருந்தில் கொழுப்பான மாமிசமும் சிறந்த திராட்சை ரசமும் பரிமாறப்படும் என்கிறார்.
பாவஞ் செய்ததினால் மனுக்குலம் மரணதண்டனை பெறக் காத்திருக்கிறது. இத்தருணத்தில் முழு மனுக்குலமும் அழிவதை விரும்பாத கடவுள் பதில் பலியாக தம் மகனையே சீயோன் மலையில் பலியிட்டார். கடவுள் தன் மகனை பலியிட்டது மட்டுமல்ல அவரை பலிவிருந்தாக்கினார். இதை ருசித்த மக்கள், இவரே நமது கடவுள், இவருக்கென்று காத்திருந்தோம். இவர் நம்மை இரட்சிப்பார். இவர் அருளும் இரட்சிப்பைப் பெற்று களிகூர்ந்து மகிழ்வோம் என்கிறார்கள். இயேசு சீயோன் மலையின் ஒரு பகுதியில் சிலுவையில் மனுக்குலத்தின் பிரதிநிதியாக சிலுவையில் பலியானார். பலியிடப்பட்ட இயேசு பலியிடப்படுவதற்கு முந்தினநாள் இரவு சீடர்களிடம் அப்பத்தைக் கொடுத்து இது என் சரீரம் என்கிறார். இரசத்தைக் கொடுத்து இது என்னுடைய இரத்தம் என்றார்.
அறிவர் மார்ட்டின் லுத்தர் பலிவிருந்தை குறித்துச் சொல்லும் போது அப்பத்திலும், அப்பத்தோடும், அப்பத்தைக் கொண்டும் இயேசு தம் சரீரத்தையும்; இரசத்திலும், இரசத்தோடும், இரசத்தைக் கொண்டும் இயேசு தம் இரத்தத்தையும் நமக்குத் தருகிறார். இதனால் நாம் பாவமன்னிப்பைப் பெறுகிறோம். பாவ மன்னிப்பைப் பெறுவதால் நாம் நித்திய வாழ்வின் சுதந்தரவாளியாகிறோம். ஞானஸ்நானத்தில் நம் ஜென்மபாவம் நீக்கப்பட்டு கடவுளின் பிள்ளைகளாக்கப்படுகிறோம். கடவுளின் மக்களாய் இருந்தாலும் பாவம் செய்கிறோம். இதை தெரிந்த ஆண்டவர் நம் மரணமோ, அவர் வருகையோ எது முந்தி இருந்தாலும் நாம் பாவமன்னிப்பைப் பெற்று நித்திய வாழ்வில் பிரவேசிக்க திருவிருந்தை ஏற்படுத்தியிருக்கிறார். பலிவிருந்தில் கடவுள் நமக்குள் வருகிறார். பாவமன்னிப்பை ருசிக்கச் செய்கிறார். புதுவாழ்வு வாழ ஆற்றல் அருளுகிறார். புது நம்பிக்கையோடு வாழச் செய்கிறார். நமக்காக நம் ஆண்டவரை கடவுள் பலியிட்டிருக்கிறார். இயேசு பலி விருந்தாக்கப்பட்டிருக்கிறார். அவரே கடவுளுக்கும் நமக்கும் மத்தியஸ்தரும் ஆகியிருக்கிறார். திருவிருந்தில் பங்கடைவோம். நித்திய வாழ்வைப் பெறுவோம்.
நித்திய வாழ்வின் அதிபதியே! இயேசுவைப் பலியிட்டு, அவரை பலிவிருந்தாகியிருக்கிறீர் நன்றி. நாங்கள் பலிவிருந்தில் பங்கடையவும் பாவமன்னிப்பை பெறவும் வழி நடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.