மத்தேயு 26 : 47-50              30 மார்ச் 2021, செவ்வாய்

“சிநேகிதனே, எதற்காக வந்திருக்கிறாய்…” – மத்தேயு 26 : 50

சிநேகிதனே அல்லது நண்பனே என்று சிநேகிதர்கள் அல்லது நண்பர்கள் அழைப்பது வழக்கம். இந்த வார்த்தையினால் அழைக்கிறவரின் உறவும் வெளிப்படும். இயேசு கெத்சமனே தோட்டத்தில் மெய்யான மனிதனாக மரண வேதனையில் இருந்தார். இதற்காக வியர்வை இரத்தப் பெருந்துளிகளாய் தரையில் விழும் அளவுக்குப் போராடி ஜெபித்தார். இயேசுவின் கைவிடப்பட்ட நிலையை பிதாவாகிய கடவுள் அறிந்தார். தம் தூதனை அனுப்பி அவரைத் தேற்றினார். இயேசு ஜெபிக்கச் செல்லும் முன் சீடர்களிடம் தமக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு முறையும் வந்து பார்த்த போது அவர்கள் தூங்கியிருந்தனர்.

இயேசு இறுதியாக சீடர்களிடம் வந்தார். மனித குமாரன் பாவிகளின் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படும் வேளை வந்தது. எழுந்திருங்கள். போவோம். என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் வந்துவிட்டான் என்றார். யூதாஸ் காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு அறிந்திருந்தார். இயேசு வழக்கமாக வந்து போகிற இடங்களை யூதாஸ் அறிந்திருந்தான். மக்கள் கூட்டத்தில் இயேசுவைப் பிடித்தால் குழப்பம் வரும் என்று தலைவர்கள் அறிந்து இயேசு தனிமையில் இருக்கும்போது பிடிக்க திட்டமிட்டார்கள்.  இயேசுவும் சீடர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். இச்சமயம் யூதாஸ் வந்தான். அவனோடு பிரதான ஆசாரியரும் மூப்பர்களும் அனுப்பிய திரளான மக்களும் வந்தார்கள். அவர்களிடம் ஆயுதங்களும் தடிகளும் இருந்தன. இயேசுவை ரபீ நீர் வாழ்க என்று வாழ்த்தி முத்தமிட்டான். இயேசு யூதாசைப் பார்த்து, சிநேகிதனே, எதற்காக வந்திருக்கிறாய்? என்றார். இதுவே இயேசுவின் மிக அருமையான அன்பான நற்செய்தி அழைப்பு. யூதாஸ் மற்ற சீடர்களைப் போல இயேசுவால் அழைக்கப்பட்டவர் இயேசுவின் உபதேசங்களைக் கேட்டவர். இயேசு செய்த அற்புதங்களைக் கண்டவர். இயேசுவின் சீடனாக இருந்து கொண்டே இயேசுவுக்கு துரோகம் செய்தார். அன்பே உருவான இயேசு இந்தத் துரோகியைப் பார்த்து சிநேகிதனே என்று அழைத்தார்.

அன்பானவர்களே! இயேசுவின் இந்த அழைப்பு நமக்கு எப்போதும் சொந்தமானது. நாம் மனந்திரும்பி மன்னிப்பைத் தேடுவோம். இயேசு நம்மை மன்னித்து சிநேகிதனே என்று அழைத்து ஏற்றுக் கொள்வார். இயேசு நம்மை நன்கு அறிந்தவர் நம் துரோகச் செயல்களை அறிந்தவர் நம்மை ஏமாற்ற மாட்டார். நம் பாவங்களை உணருவோம். நாம் பெரும் பாவி, துரோகி என்று நம்மை தள்ள மாட்டார். இயேசுவின் அழைப்பை ஏற்போம். புது உறவில் வாழ்வோம்.

பாவிகளை நேசிக்கிற கடவுளே! எங்கள் மீது அன்பு கொண்டு இயேசுவை எங்கள் சிநேகிதராக தந்ததற்கு நன்றி. இயேசுவின் அழைப்பை ஏற்று சிநேகிதனாக வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.