லூக்கா 19 : 36-38 28 மார்ச் 2021, ஞாயிறு
“கர்த்தரின் நாமத்தில் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர்.” – லூக்கா 19 : 38
காந்தி 1930ம் வருடம் மார்ச் மாதம் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்த தண்டியை நோக்கி புறப்பட்டார். 24 நாட்கள் சுமார் 240 மைல் தூரம் நடந்தார். உப்பளத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த உப்பை அள்ளி சட்டத்தை மீறினார். பூனேவிலுள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பயணம் இந்தியா முழுவதும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது.
இயேசுவின் எருசலேம் பயணமும் திருமறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பயணம் கல்வாரிப் பயணத்தின் முதல் பகுதியாகும். இயேசுவின் எருசலேம் பயணம் நெடுநாள் காத்திருப்புக்கும் கடின உழைப்பிற்கும் பிறகு மேற்கொள்ளப்பட்டதாகும். ஆகையால் இது மனுக்குல மீட்புப் பயணம். இயேசுவின் மீட்பின் பயணத்தில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் எருசலேமை நோக்கித்தான் அமைந்திருந்தது. இந்தப் பயணத்தில் நாமும் பங்கு பெற வேண்டுமானால் நம்முடையதில் எதையாவது இழக்க வேண்டும். இழக்காதவர்களுக்கு இப்பயணத்தில் இடமில்லை. கழுதைக்கு உரிமையாளன் கழுதையை இழந்தான். சீடர்கள் தங்கள் மேலாடைகளை கழுதையின் மேல் போட்டு இயேசுவை அமரச் செய்தார்கள். கூடி வந்த மக்கள் தங்கள் மேலாடைகளை பாதையில் விரித்தனர். ஒலிவமரம் தன் கிளைகளை இழந்தது.
மக்கள் பாடிய ஓசன்னா வெற்றி கீதம் மக்களின் முழுமையான சரணாகதியை காட்டியது. இது மீட்பை எதிர்பார்க்கும் வெற்றியின் கீதம் கூட. இயேசுவால் மட்டுமே அனைவரையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கையின் அடித்தளத்தில் தான் மக்கள் இயேசுவோடு பயணம் மேற்கொண்டார்கள்.
கழுதைப் பயணம் அகிம்சையின் பயணம். இயேசு வெற்றி வீரராக, சமாதானத்தின் தூதுவராய், அகிம்சைவாதியாக பவனி வருகிறார். ஆரவாரமில்லாமல் அன்ன நடைபோடும் கழுதையின் மேல் அமர்ந்து, தான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் நிறைந்தவர் என்பதை காண்பிக்கிறார். ரோமப் போர் வீரர்கள் வாயடைக்க எருசலேம் நோக்கி பயணப்பட்டார். இயேசு வரலாற்றில் வாழ்ந்தவர். வரலாற்றை மாற்றி அமைத்தவர். மரணம் கண்முன் இருந்ததை தெரிந்தும் கலங்காத நெஞ்சத்துடன் இயேசு முன்னேறுவதை என்னவென்று சொல்லுவது? எல்லாரும் மீட்படைய தம் இன்னுயிரை இழப்பதென்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.
நாமும் விண்ணகம் நோக்கிப் பயணிக்கிறோம். இப்பயணத்தில் வெற்றி பெற நம்மை கடவுளின் கரத்தில் ஒப்புவிப்போம். வெற்றியின் பாடல்களைப் பாடுவோம். பரம எருசலேமில் இடம் பிடிப்போம். நம்மை இழந்தாலன்றி இயேசுவோடுள்ள வாழ்வைப் பெற இயலாது. நம் வாழ்வால், சாட்சியத்தால் இயேசுவோடு பயணிப்போம்.
விண்ணகத் தந்தையே! நாங்கள் உம்மோடுள்ள வாழ்வைப் பெற இயேசுவோடு பயணிக்க எங்களைத் தகுதிப்படுத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.