லூக்கா 22 : 43-46 27 மார்ச் 2021, சனி
“தூதன் அவருக்குக் காணப்பட்டு அவரைப் பலப்படுத்தினான்.” – லூக்கா 22 : 43
கடவுள் நாம் காண்கிற மண்ணுலகையும் காணாத விண்ணுலகையும் படைத்தார். விண்ணுலகப் படைப்புகளில் சிறப்பானவர்கள் வானதூதர்கள். இவர்கள் பரிசுத்தமும் பாக்கியமுமான நிலையில் படைக்கப்பட்டவர்கள். தூதர்கள் என்ற சொல்லுக்கு அறிவிப்பவர்கள், கடவுளால் அனுப்பப்படுகிறவர்கள் என்று பொருள். இவர்கள் கடவுளின் கட்டளைகளை மக்களுக்குத் தெரிவித்து, விளக்குகிறார்கள். தூதர்கள் பரலோகத்தில் பிதாவின் சமூகத்தை எப்பொழுதும் தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகார் வனாந்தரத்தில் வேதனையோடு எதிர்காலத்தை குறித்த ஐயப்பாட்டோடு இருந்த சூழலில் தூதன் கடவுளின் செய்தியை சொல்லி தேற்றினார். ஈசாக்கின் பலி நிகழ்வையும் யாக்கோபு தாய் நாடு திரும்ப கட்டளை பெற்ற நிகழ்விலும் எலியா யேசேபெல் அரசிக்குப் பயந்து பயணப்பட்ட போது தூதன் தட்டி எழுப்பி கட்டளை கொடுத்தது போன்ற பல நிகழ்வுகள் திருமறையில் காணக்கிடக்கின்றன. நம் ஆண்டவர் பிறப்பின் செய்தியை மரியாளுக்கு அறிவித்தது தூதனே. இயேசுவின் பிறப்பின் செய்தியை மேய்ப்பர்களுக்கு அறிவித்ததும் பிறப்பை புகழ்ந்து பாடியது தூதர்களே. இயேசு சிலுவை மரணத்தை எதிர்கொள்ள போராட்ட ஜெபம் செய்த வேளையில் ஏற்பட்ட சோர்வு மற்றும் தனிமையிலிருந்து விண்ணிலிருந்து தூதன் வந்து இயேசுவை தேற்றினான். இயேசு புது பலம் பெற்றார். மதத்தலைவர்களும் சமூக தலைவர்களும் மக்களும் தனக்கு எதிராக செயல்பட்டதால் திகைத்த போது தூதன் அவர் திகைப்பை நீக்கினான். இயேசு மரணத்தை ஏற்கும் ஆற்றலைப் பெற்றார்.
கடவுள் நம்மைப் பாதுகாக்கவும், பலப்படுத்தவும், நமக்குச் செய்தி சொல்லவும் தம் தூதர்களை பயன்படுத்துகிறார். அவர்கள் நம்மைச் சூழ நிற்கிறார்கள். ஆபத்துக்காலங்களில் தங்கள் கைகளில் ஏந்திக் கொள்ளுவார்கள். முன்னும் பின்னும் பாதுகாப்பாய் இருக்கிறவர்கள் என்பதை அறிந்து கர்த்தரில் நம்பிக்கைவைத்து துணிவோடு வாழுவோம்.
விண்ணையும் மண்ணையும் படைத்தவரே! மண்ணுலக மாந்தரை பாதுகாக்கவும் அவர்களுக்கு செய்தி சொல்லவும் தூதர்களை படைத்திருக்கிறீர். அவர்களை எங்களிடம் அனுப்பி எங்களை பாதுகாக்கவும் உம் செய்தியை சொல்லவும் வேண்டுகிறோம். இயேசுவில் பிதாவே, ஆமேன்.