மத்தேயு 26 : 36-39                       26 மார்ச் 2021, வெள்ளி

“என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” – மத்தேயு 26 : 39

மனுக்குலம் பாவம் செய்ததால் கடவுளைப் பிரிந்தது. இதற்காக கடவுள் மனம் வருந்தினார். கடவுள் நம் மீது பரிவும் பாசமும் கொண்டார். மனுக்குலத்தை மீட்டெடுக்க தம் ஒரே மகனை வாக்களித்து, இயேசுவை இவ்வுலகில் பிறக்கச் செய்தார். மனுக்குலத்தில் ஒருவரும் கெட்டுப்போகாதபடி நித்திய வாழ்வை பெறும்படி இயேசுவை தந்தருளினார் என்கிறார் யோவான். மனுக்குலத்தை மீட்கவே பிதா என்னை அனுப்பியிருக்கிறார் என்பதை இயேசு அறிந்திருந்தார். இதனால் தன் பணியை ஆரம்பித்த நாளிலிருந்து சிலுவையை நோக்கி நடக்கலானார். ஊழியத்தின் உச்சக்கட்டமான சிலுவை மரணத்திற்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுக் கொள்ள கெத்சமனே தோட்டத்திற்கு ஜெபிக்கச் சென்றார். சீடர்களிடம் ஜெபம் செய்ய சொல்லிவிட்டு தனிமையில் சற்று தூரம் சென்று, அங்கு முகங்குப்புற விழுந்து ஜெபித்தார். இயேசுவின் ஜெபமே நமது தியானப்பகுதி. என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமாகில் நீங்குவதாக. ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபித்தார்.

அறிவர் மார்டீன் லுத்தர் விசுவாசப்பிரமாணம் இரண்டாம் பிரிவுக்கு பொருள் சொல்லும்போது “பிதாவினிடம் அநாதியாய்ப் பிறந்த மெய்யான கடவுளும் கன்னிமரியாளிடம் பிறந்த மெய்யான மனிதனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்து என்று சொல்லுகிறார். இயேசு மெய்யான மனிதன். அவருக்கு நம்மைப் போன்ற சரீரமும் ஆன்மாவும் இருந்தன. நம்மைப் போன்ற உணர்வுகளும் இருந்தன என்று நாம் பார்க்கிறோம். மெய்யான மனிதனாக இயேசுவுக்கு மரண பயம் இருந்தது. அவர் மரணத்தை விரும்பவில்லை. பிதாவை உரிமையோடு அழைத்தார். இந்த மரணத்தை என்னை விட்டு நீக்கி விடும் என்று கேட்டார். ஆனால் அதே வேளையில் பிதாவின் சித்தப்படி மனுக்குலத்தை மீட்க நான் சிலுவையில் மரித்துதான் ஆக வேண்டும் என்பதை அறிந்திருந்த இயேசு தன்னை பிதாவின் சித்தத்திற்கு ஒப்புவித்தார். பிதாவே என் சித்தமல்ல உமது சித்தப்படியே ஆகக்கடவது என்று சொல்லி சிலுவை மரணத்தை ஏற்றார்.

இயேசுவின் சிலுவை மரணம் மனுக்குல வாழ்வுக்கு ஆதாரமும் அடித்தளமுமாயிற்று. அத்துடன் ஊழிய ஆரம்பமுதலே பிதாவின் சித்தத்தை அறிந்து அதை நிறைவேற்றினார். அதுவே என் போஜனம் என்றார். கடவுள் நம்மை இயேசுவில் தேடி வந்து மீட்டிருக்கிறார். பிதாவின் சித்தம் எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது. பிதாவின் சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுப்போம். சிலுவை மரணத்தின் நம்பிக்கையுடன் நித்திய வாழ்வைப் பெறுவோம்.

படைப்பின் கால முதலே தம் சித்தத்தை வெளிப்படுத்தியிருக்கிற கடவுளே! வசனங்களில் உம் சித்தத்தை அறிந்து அதன்படி வாழக் கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.