1 தீமோத்தேயு 2 : 1-6 25 மார்ச் 2021, வியாழன்
“கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.” – 1 தீமோத்தேயு 2 : 5
நாம் வாசித்த திருமறைப்பகுதி கிறிஸ்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வலியுறுத்துகிறது. கிறிஸ்தவ தொழுகை கூட்டுத் தொழுகையாகும். ஆதித்திருச்சபை மக்கள் மன்னர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும் ஜெபித்தார்கள். நல்ல குடி மக்களாக மக்கள் வாழ்வதையும் கிறிஸ்தவம் வலியுறுத்தியது. இறைபக்தி என்பது கடவுளுக்குப் பயந்து வாழும் அனுதின வாழ்வு நெறியையே குறிக்கும். சத்தியத்தை ஒரு மனிதன் அறிகிறானென்றால் அவன் நற்செய்தியை ஏற்றுக் கொள்கிறான் என்று பொருள். சத்தியத்தை மதிப்பது என்பது அறிவாலும் உணர்வாலும் செயலாலும் கடைபிடித்து நடப்பதாகும்.
பாவத்தால் மனிதன் கடவுளைப் பிரிந்தான். பாவ நிலையில் யாரும் கடவுளுடைய சமூகத்தில் வரமுடியாது. கடவுள் நம்மை படைத்து தம் ஆவியை அருளியவர். தன் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதன் இரட்சிக்கப்பட வேண்டும், தன்னோடுள்ள வாழ்வை மீண்டும் பெற வேண்டுமென்று ஆசித்தார். எல்லா மனிதரும் இரட்சிப்பைப் பெற வேண்டும். அதற்கு சத்தியமாகிய இயேசுவை அறிய வேண்டும். இதுதான் கடவுளின் சித்தம் என்று இயேசு சொல்லுகிறார். இதற்காக இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார். இயேசு நம் பாவங்களை தம் மீது ஏற்றுக் கொண்டு கல்வாரி சிலுவையில் இரத்தஞ்சிந்தி பலியானார். இதனால் நாம் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டோம். இயேசு புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார்.
பத்து கற்பனைகளின் அடித்தளத்தில் கடவுள் மோசேயை மத்தியஸ்தராகக்கொண்டு இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணினார். இஸ்ரவேலர் இந்த உடன்படிக்கையை மீறினார்கள். எனவே கடவுள் இஸ்ரவேலருக்கு புது உடன்படிக்கையைச் செய்வேன் என்றார். இயேசுவை மத்தியஸ்தராக கொண்டு அன்பு என்ற கற்பனையைக் கொடுத்து உலக மக்களோடு கடவுள் புது உடன்படிக்கை செய்தார். நான் உன் கடவுள், நீங்கள் என் மக்கள் என்பதே இரண்டு உடன்படிக்கைகளின் சாரம். இயேசு மத்தியஸ்ராக இருப்பதால் நாம் தைரியமாய் கடவுளிடம் வரலாம். கடவுளின் பண்புகள் அனைத்தையும் இயேசு வெளிப்படுத்தினார். நாம் இயேசுவில் பிதாவைக் காணும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். பாவத்தால் பிரிந்து போன நாம் மத்தியஸ்தரான இயேசுவில் பிதாவோடு சமாதானமாகவும் ஒப்புரவாகவும் ஐக்கியமாகவும் வாழ்வோம்.
ஒரே கடவுளே! பாவத்தால் உம்மை பிரிந்து அந்தகாரத்தில் தடுமாறினோம். இயேசுவை மத்தியஸ்தராக அனுப்பி எங்களைச் சேர்த்துக் கொண்டீர். நன்றி. இந்த உறவில் நிலை நிற்க அருள்தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.