மத்தேயு 20 : 17-19                                                  27 பிப்ரவரி 2021, சனி

“….எருசலேமுக்குப் போகிறோம்….” – மத்தேயு 20 : 18

கடவுள் தாம் வாக்களித்தபடி மனுக்குலத்தை மீட்க மேசியாவான இயேசுவை அனுப்பினார். இயேசு நம்மைப் போல நம்மோடு சமதளத்தில் பிறந்து வாழ்ந்தார். முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்று மீட்பின் பணியை ஆரம்பித்தார். இயேசு ஊழியத்தை ஆரம்பித்த நாளிலிருந்து சிலுவையில் தாம் பலியிடப்படவேண்டும், அதன் வழியாக மனுக்குலத்தை மீட்கவேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடனே செயல்பட்டார். கல்வாரி சிலுவையில் மீட்பின் பணியை நிறைவு செய்தபின் அந்த செய்தி உலகமெங்கும் பரவ சீடர்களைத் தெரிந்தெடுத்தார். தம்முடனே இருக்கச் செய்து பயிற்றுவித்து பக்குவப்படுத்தினார்.

நமது தியான வாக்கியப் பகுதியில் இயேசு மரணத்தை எதிர்கொண்டு எருசலேமுக்குப் போக ஆயத்தப்பட்ட சூழல் பேசப்படுகிறது. அப்பொழுது சீடர்களை இயேசு தனியே அழைத்தார். நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே தன்னை பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் பிடித்து பரிகசிப்பித்து மரண தீர்ப்பிடுவார்கள். வாரினால் அடிப்பார்கள். சிலுவையில் அறைவார்கள் என்றார். அத்துடன் இது நிறைவுறும். ஆனால் மூன்றாம் நாளில் என் பிதா என்னை உயிருடன் எழுப்புவார் என்றார். எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவேண்டும், ஒருவர் கூட கெட்டுப் போகக்கூடாது. இதற்காகவே பிதா தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். பிதாவின் சித்தத்தை அறிந்த இயேசு அதை நிறைவேற்ற மன உறுதியோடு செயல்பட்டார். மனுக்குலத்தின் மீது அன்பு கூர்ந்தார். அதற்காக எருசலேமுக்குச் சென்றார்.

பலநேரங்களில் நமக்கு மனக்கலக்கமும் பயமும் ஏற்படுகின்றன. குடும்பங்களில் வியாதி, மரணத்தைச் சந்திக்கிறோம். எதிர் காலத்தைக் குறித்த பயமும் ஏக்கமும் ஏற்படுகின்றன. இத்தகைய சூழலுக்கு நம் பாவமே காரணமாகும். இத்தகைய சூழலில் மரணத்தை எதிர்நோக்கிச் சென்று சிலுவையில் நம்மை மீட்ட இயேசுவை நோக்கிப் பார்ப்போம். பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவால் மட்டுமே நம் பாவங்களை நீக்க முடியும் என்று திடமாய் நம்புவோம். இயேசு நம் பதிலாளாக பாடுகளையும் வேதனைகளையும் ஏற்று சிலுவையில் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் வேதனைகளும் வியாதிகளும் வாட்டி வதைத்தாலும் அவற்றிலிருந்து இயேசு விடுவிப்பார் என்று உறுதியாய் நம்புவோம். அவர் நம்மை வெற்றி பெறச் செய்வார்.

எருசலேமுக்குப் போகிறோம் என்று துணிவோடு அழைத்தவரின் அழைப்பை ஏற்போம். அவர் கரங்களைப் பற்றிக் கொள்ளுவோம். அவர் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்போம். உலக துன்பங்கள் மத்தியில் இயேசு நம்மோடு பயணிக்கிறார். அவர் நம்மை எல்லா சூழ்நிலையிலும் விடுவிப்பார். பாதுகாப்பார். இந்த நிச்சயத்தில் வாழ்க்கைப் பயணத்தை தொடருவோம்.

படைப்பின் காரணரே! நாங்கள் பாவம் செய்து பிரச்சனைகளில் தவிக்கிறோம். இயேசு எங்களை விடுவிக்க துணிவோடு மரணத்தை எதிர்கொண்டார். அவர் என்னை விடுவிப்பார் என்ற நம்பிக்கையில் வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.