ஆதியாகமம் 3 : 8-13 19 பிப்ரவரி 2021, வெள்ளி
“உனக்கும் ஸ்திரீக்கும், உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்கி வைப்பேன்.” – ஆதியாகமம் 3 : 15
கடவுள் அழகிய உலகைப் படைத்தார். இதில் ஆதாம் ஏவாள் என்ற முதல் மனிதர்களையும் படைத்தார். பரந்து விரிந்த உலகில் இக்குடும்பம் வாழ அழகிய ஏதேன் என்னும் தோட்டத்தையும் உருவாக்கி அவர்களுக்குக் கொடுத்தார். மனிதன் கடவுளுக்கு உகந்தவனாகவும் எதிர்காலத்தில் சக மனிதர்களுக்கு உகந்தவர்களாகவும் வாழ வழிமுறைகளையும் கட்டளைகளையும் வகுத்துக் கொடுத்தார். கடவுளின் கட்டளைகளை சாத்தானின் வார்த்தைகளை நம்பி மனிதர்கள் மீறினார்கள். இதனால் கடவுளோடுள்ள உறவை இழந்தார்கள். கடவுளுக்குப் பயந்து ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்.
பாவம் பெருகியதால் கடவுளுக்கும் மனிதர்களுக்குமுள்ள இடைவெளி அதிகமாயிற்று. இதைக் கண்டு கடவுள் பரிதாபப்பட்டார். மனிதனுக்கு வாழ்வு கொடுக்க மேசியா ஒருவரை வாக்களித்தார். மேசியாவைக் குறித்த முதல் வாக்குத்தத்தமே நமது தியானப் பகுதி. பாவஞ் செய்ய தூண்டுதலாயிருந்த சாத்தானிடம் கடவுள், ‘உனக்கும், உன் கூட்டத்தையும் வென்று கொன்று அழிக்கும்படி ஒரு மேசியாவை பெண்ணிடம் பிறக்கச் செய்வேன். அவர் உன் கொடுக்கை அழித்து ஒழிப்பார். உன்னால் அவர் குதிங்காலை மட்டுமே தீண்ட முடியும்’ என்றார். மனிதனால் பாவம் வந்தது. மனிதனால் தான் பாவமன்னிப்பும் வரவேண்டும். அதுதானே நியதி. எனவே மேசியாவை பாவம் இல்லாதவராக கடவுள் பிறக்கச் செய்தார். இதற்காக கடவுள் வரலாற்றுக்குள் வந்து உலகை ஆயத்தப்படுத்தினார்.
கடவுள் வாக்குத் தத்தங்களைத் தருகிறவர் மட்டுமல்ல அவற்றை நிறைவேற்றுகிறவர். உலகில் ஒருவர் கூட கெட்டுப்போகாமல் நித்திய வாழ்வைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காக மேசியாவான இயேசுவை வாக்களித்தபடி அனுப்பினார். இயேசு பாவ நிவிர்த்திக்காக தம்மையே சிலுவையில் பலியிட்டு, மனுக்குலத்தின் மீட்பை கல்வாரி சிலுவையில் உறுதிப்படுத்தியிருக்கிறார். மனுக்குல மீட்புக்காக இயேசு வாக்களிக்கப்பட்டார். இயேசு மீட்பை நிறைவு செய்திருக்கிறார். இயேசுவில் வைக்கிற விசுவாசத்தினால் நாம் மீட்பைப் பெறுகிறோம். இதனால் நித்திய வாழ்வுக்கு சுதந்திரவாளிகளாக இருக்கிறோம் என்பதை உறுதியாக நம்புவோம். இறைவாக்குத் தத்தங்களை நம்புவோம். அழியா வாழ்வைப் பெறுவோம்.
நித்திய வாழ்வின் அதிபதியே! நாங்கள் என்றும் உம் வாக்குத் தத்தங்களை நம்பி அதன் வழி நடந்து நித்திய வாழ்வைப் பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.