01 பிப்ரவரி, 2021        திங்கள்

“சிநேகிதன் அன்பு எக்காலமும் உண்டு, சகோதரன் பிறப்பது இக்கட்டில் உதவி செய்வதற்கே.” – நீதிமொழிகள் 17 : 17

ஒரு கனசதுரத்தின் அனைத்து பக்கங்களையும் காட்டும் ஒரு  வரைபடத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் அது ஒரு கன சதுரம் அல்ல; முப்பரிமாண மாயையை வெளிப்படுத்தும் தட்டையான வரைபடமாகும்.

உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கலாம். உங்கள் நட்பு முப்பரிமாணத்தில் வளர்கிறதா? அவை ஆழமான நட்பா? அல்லது கனசதுரத்தை காகிதத்தில், தட்டையாக, மேலோட்டமாகப் பார்ப்பது போலவா? நாம் வயதாக ஆக நம்மையே அதிகம் நம்புவதற்கும் சார்ந்து இருப்பதற்கும் கற்றுக் கொள்கிறோம். நம்முடைய வேலை அல்லது பொழுதுபோக்குகளில் நிறைவைக் காண்கிறோம். நாம் இங்கே கவனமாக இருக்க வேண்டும். மனிதன் கூட்டுவாழ்வு முறையில்  இயற்கையாகவே இருந்தாலும், வெகுசுலபமாக தனிமை வாழ்முறைக்குள் விழுவது எளிதாகும். சொல்லப்போனால் இன்றைய உலக மனிதர்களுக்குள்ள பெரும் சவாலும் இதுதான்.

நம்முடைய பிதா தம்முடைய எல்லா பிள்ளைகளையும் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழும்படி படைத்தார். ரூத், நகோமி, தாவீது மற்றும் யோனதான், பவுல் மற்றும் தீமோத்தேயு. நட்பின் கதைகள் மற்றும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பைபிளில் நிறைந்துள்ளது. இந்த நட்பின் வழியாகவும் கடவுள் பணியாற்றினார், தனிநபர்களை ஒன்றிணைத்தார். ஒருவருக்கொருவர் அவர்கள் கொண்டுள்ள அக்கறையும், கடவுள் மீதுள்ள அன்பும் – அவர்களின் வாழ்க்கையில் ஆழத்தையும் பரிமாணத்தையும் சேர்த்தது. இது கடவுளின் திட்டமாயிருந்தது.

நாமும் மற்றவர்களுடன் இணைந்து சமூகத்தில் இருப்பது நல்லது. நாம் வசிக்கும் இடங்கள், பணி செய்யும் அலுவலகங்கள், செல்லும் ஆலயங்கள் இவ்வனைத்து இடங்களிலும் ஆரோக்கியமான நட்புகளை, உறவுகளைப் பேணுவோம். நல்ல நட்புகள் வழியே கடவுளின் ஆசிகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஒருவருக்கொருவர் பலமளித்து ஊக்கப்படுத்த, உதவி செய்ய முடியும். நம்முடைய நட்பு கடவுளின் திட்டப்படி உண்மையிலேயே முப்பரிமாணத்துடன் வளரட்டும். நல்ல நட்புகள் கிடைக்க ஆண்டவர் அருள்வாராக.

பரலோகத் தகப்பனே, நாங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருக்க அருள்புரியும். இயேசுவின் பெயரில். ஆமேன்.