யோவான் 10 : 11-15           25 டிசம்பர் 2020, வெள்ளி

“….நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”– யோவான் 10 : 11

மனித வரலாற்றில் பழம்பெரும் நாகரீகம் ஆற்றோரங்களில் தான் தோன்றியது. ஆடு மேய்ப்பது அவர்கள் தொழிலாக இருந்தது. இதன்பின் விவசாயத் தொழிலில் ஈடுபட்டார்கள். விவசாயத்தின் இணைத் தொழிலாக மேய்ப்புத் தொழில் விளங்கியது. இது மானுட வரலாற்றில் செல்வச் செழிப்புமிக்கத் தொழிலாக அமைந்திருந்தது.

மேய்ப்பர்கள் மானுட வரலாற்றில் நாடோடிகளாக உலகை வலம் வந்தார்கள். உலகை ஆக்கிரமித்தார்கள் என்பதும் வரலாறு. இஸ்ரவேலரும் இத்தகைய தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்கள். கடவுளை மேய்ப்பவராகப் பார்ப்பது எல்லா சமயங்களிலும் காணப்படுகிறது. இஸ்ரவேலர் தீர்க்கர்களையும் அரசர்களையும் மேய்ப்பவர்களாக கருதினார்கள். கடவுளையும் மேய்ப்பராக எண்ணினார்கள். தங்களை கடவுளின் மந்தையாக சித்தரித்தார்கள். சங்கீதம் 23-ல் கடவுள் நம் மேய்ப்பர் என்று தாவீது விளக்குகிறார். இதன் மத்தியில் இயேசு தம்மை நல்ல மேய்ப்பராக குறிப்பிடுகிறார். இயேசுவின் பிறப்பை முன் அறிவிக்கிற மீகா தீர்க்கர் என் ஜனமாகிய இஸ்ரவேலை மேய்த்து நடத்தும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று கூறியதை எடுத்துக் காண்பிக்கிறார். மேய்ப்பர்கள் மந்தையை நேசிக்கிறவர்கள், நம்புகிறவர்கள், அறிகிறவர்கள், பாதுகாக்கிறவர்கள், நெறிப்படுத்து கிறவர்கள், வழி நடத்துகிறவர்கள், தன்னலத்தைத் துறந்து தியாக உணர்வோடு அளவில்லா பொறுமையோடும் வாழ்கிறவர்கள் என்பதை அறிய முடியும்.

இயேசு மந்தையின் ஆடுகளைத் தேடிவந்தார். காணாமல் போயிருந்தவற்றை கண்டுபிடித்தார். அல்லும் பகலும் மந்தையைப் பாதுகாக்கிறார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மந்தை அழியா வாழ்வைப் பெறவேண்டும் என்பதற்காக தன் உயிரை ஈந்து ஆடுகளை காப்பாற்றியிருக்கிறார். இயேசுவின் அன்பு கல்வாரி சிலுவையில் வெளிப்பட்டது. தம் மந்தையிலுள்ள ஒவ்வொரு ஆட்டையும் பெயர் சொல்லி அழைக்கும்படி ஒவ்வொரு ஆட்டையும் அறிந்திருக்கிறார். மேற்கூறிய பண்புகளால் இயேசு நல்ல மேய்ப்பராக திகழ்கிறார்.

நாம் கடவுளின் மந்தை. இயேசு நல்ல மேய்ப்பர். பிரதான மேய்ப்பராம் கடவுளிடம் நம்மைச் சேர்க்கும்படி நாம் வாழுகிற இடங்களில் நம்மை மேய்த்து நடத்தும்படி மேய்ப்பர்களை தந்திருக்கிறார். நாம் சிதறிப்போகாதபடி கள்ள உபதேசத்தால் வழி விலகாதபடி இருக்க திருச்சபைகளை ஏற்படுத்தியிருக்கிறார். திருச்சபையில் இணைந்திருப்போம். கிருபையின் எத்தனங்களில் பங்கடைவோம். மறுமையில் கடவுளோடிருக்கிற வாழ்வைப் பெறுவோம்.

பிதாவின் மேய்ப்பரே, எங்களை இயேசுவின் வழியில் உம் மந்தையில் சேர்த்திருக்கிறீர். மந்தையை விட்டு விலகாமல் இணைந்திருக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.