அப்போஸ்தலர் 15 : 22-27 17 நவம்பர் 2020, செவ்வாய்
“அப்படியே யூதாசையும் சீலாவையும் அனுப்புகிறோம்.” – அப்போஸ்தலர் 15 : 27
சீலா என்ற பெயருக்கு `சோலை’ என்று பொருள். இவர் ஒரு யூதன். ரோம குடியுரிமை பெற்றவர். சமூகத்தில் நல்மதிப்புப் பெற்றவர். சீலா என்ற பெயர் லத்தின் மொழியில் `சில்வானஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இவர் ஒரு தீர்க்கதரிசியுமாவார். அப்போஸ்தலர் நடபடியில் சீலா என்றும் நிருபங்களில் சில்வானு என்றும் குறிப்பிடப்படுகிறார். பவுலடிகளார், தூய பேதுரு ஆகியோருடன் நற்செய்திப் பணிகளில் பங்கு பெற்றவர். அந்தியோகியாவில் பிரச்சனை எழுந்தபோது அப்போஸ்தலர்களின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர்களில் சீலாவும் ஒருவர்.
பவுலடிகளாரின் இரண்டாம் நற்செய்திப் பயணத்தில் மாற்குவுக்குப் பதிலாக சீலா சென்றார். இப்பயணத்தில் இக்கோனியா, கலாத்தியா, பிரிகியா, சீரியா, சிலிசியா ஆகியப் நகரங்களுக்குச் சென்று பணிபுரிந்தார். பவுலடிகளாருடன் அவரது சிறை வேதனைகளையும் பகிர்ந்து கொண்டார். தெசலோனிக்கே, பெரேயா பட்டணங்களில் குழப்பம் ஏற்பட்டபோது உடனிருந்த பவுலடிகளாரைக் காத்தார். பவுலடிகளார் பெரேயாவை விட்டுப் புறப்பட்டபோது சீலா தீமோத்தேயுவுடன் தங்கினார். பின்னர் கொரிந்துவில் பவுலடிகளாரோடு இணைந்து கொண்டார். சீலா தூய பேதுருவுக்கும் உதவியாளராக இருந்தார். பேதுருவின் முதலாம் நிருபத்தை ஆசியாவிலிருந்த சபைகளுக்குக் கொண்டு சென்ற உண்மையுள்ள சகோதரர் இவர்.
எருசலேம் மாமன்றம் பிற இன மக்கள் கிறிஸ்துவிடம் வரும்போது சட்டதிட்டங்களைக் காட்டி அவர்களை கலங்கப் பண்ணக்கூடாது என்று தீர்மானித்தது. அத்துடன் விக்கிரகங்களாகும் தீட்டுகளுக்கும், வேசித்தனத்திற்கும் நெருங்குண்டு செத்ததற்கும் இரத்தத்திற்கும் விலகி இருக்க வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். இத்தீர்மானங்களை அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அதற்கு பவுலடிகளாரோடும் பர்னபாவோடும் சகோதரரில் சிறந்தவர்களாகும் பர்சபா என்ற யூதாசும் சீலாவும் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். சபைகளிலும் குடும்பங்களிலும், சமூகத்திலும் பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்படுவது இயல்பு. அத்தகைய வேளைகளில் அதை தீர்த்து வைக்கும், காரியங்களை தெளிவாய் எடுத்து சொல்ல நாம் தகுதியோடு இருக்கவேண்டும். இந்தத் தகுதி விசுவாசத்தாலும் இறைவார்த்தையாலுமே ஏற்படுகிறது. நம்மை தகுதிப்படுத்துவோம். மக்களில் சிறந்தவர்களாக மாற பாடுபடுவோம்.
ஞானத்தின் உறைவிடமான கடவுளே! ஞானத்தை உருவாக்கும். திருமறை எழுத்துக்களில் நிலைத்திருக்கவும் விசுவாசத்தில் உறுதியாக வாழவும் பிறருக்கு அவற்றை விவரிக்க ஞானத்தைத் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
