மத்தேயு 10 : 1-15                                      25 அக்டோபர் 2020, ஞாயிறு

“நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்.” – யோவான் 1 : 48

யோவான் நற்செய்தி நூலில் நாத்தான்வேல் என்று குறிப்பிடப்படுபவர் இயேசுவின் சீடர். இவர் பிற நற்செய்தி நூல்களில் பர்தொலொமேயு என்று குறிப்பிடப்படுகிறார். பர்தலொமேயு என்பதற்கு `தோல்மாயின் மகன்’ என்பது பொருள். நாத்தான்வேல் திருமறையை அறிந்தவர். கடவுளையும் இறை அரசையும் குறித்து தியானிப்பவர். ஒரு ஜெபவீரர் என்றும் சொல்லப்படுகிறது. ஆண்டவர் பிலிப்புவை தன்னை பின்பற்றி வா என்று அழைத்தார். பிலிப்பு இயேசுவின் அழைப்பை ஏற்றார். அவரே நாத்தான் வேலைக் கண்டு பிடித்தார். தான் கண்டுக்கொண்ட இயேசுவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். நாத்தான்வேலை இயேசுவிடம் அழைத்து வந்தார். நாத்தான்வேல் வருவதைக் கண்ட இயேசு இவன் கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

நாத்தான்வேல் அதிர்ச்சியடைந்தார். நீர் எப்படி என்னை அறிவீர் என்று கேட்டார் இயேசு. பிலிப்பு உன்னை அழைக்கும் முன் நீ அத்திமரத்தின் கீழே இருக்கும்போதே உன்னைக் கண்டேன் என்றார். நாத்தான்வேல் ரபீ நீர் கடவுளின் குமாரன் என்றார். இவர் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கும் போது குரு, ரபீ, கடவுளின் குமாரன், இஸ்ரவேலின் அரசன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இயேசு மரித்த போது இவரும் கூட ஆறு சீடர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். இயேசு இவர்களுக்குத் தன்னை உயிருள்ளவராக காண்பித்தார். மீண்டும் சாட்சியிட அழைத்தார். நாத்தான்வேல் ஆர்மீனியாவில் இறைப்பணி புரியும் போது பல அற்புதங்களை செய்தார் என்ற குறிப்புகளும் இருக்கின்றன. இவர் கி.பி. 68ம் ஆம் இரத்த சாட்சியாக மரித்தார்.

திருமறை எழுத்துக்களை வாசித்து கடவுளை அறிய முற்படுகிறவர்களுக்கு கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார். தியானம், ஜெபம் இவற்றில் பிரியங்கொள்ளுகிறவர்களை அறிகிறார். திருமறை வசனங்களே நமக்கு இயேசுவை கண்டுக் கொள்ளச் செய்கின்றன. தூய ஆவியானவர் வசனத்தின் வழி நம் உள்ளங்களில் செயலாற்றுகிறார். நற்செய்தி வழியாக நம்மை கடவுளின் மகிமையைப் பெற அழைக்கிறார். நாம் நித்திய வாழ்வை பெற வழி நடத்துகிறார். இயேசுவில் வைக்கிற விசுவாசத்தால் நித்திய வாழ்வை நாம் இலவசமாகப் பெறுகிறோம். இச்செய்தியை பிறருக்கு அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணருவோம். சாட்சியாய் வாழுவோம்.

அன்பு நிறைந்த கடவுளே! உம் திருவார்த்தைகள் வழியாய் உம் நேசக் குமாரனை அறிந்துகொள்ள கிருபை செய்யும். நாங்கள் அறிந்த ஆண்டவரை பிறரோடு பகிர்ந்தளிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.