1 இராஜாக்கள் 19 : 9-13 04 செப்டெம்பர் 2020, வெள்ளி
“அதற்கு அவன்: சேனைகளின் கடவுளாகிய கர்த்தருக்காக வெகுபக்தி வைராக்கியமாயிருந்தேன்.” – 1 இராஜாக்கள் 19 : 10
ஆகாப் இஸ்ரவேலை ஆண்டு கொண்டிருந்தான். தீருவின் அரசியான இவன் மனைவி யெசபேலால் நாட்டில் பாகால் வழிபாடு தீவிரமடைந்தது. இக்காலத்தில் எலியா தீர்க்கர் பணியாற்றினார். இவர் பாகால் வழிபாட்டை கடுமையாக எதிர்த்தார். தீர்க்கர் அரசனிடம் நீ கடவுளை மறந்துவிட்டதால் நாட்டில் மழையோ பனியோ பெய்யாது என்றார். அப்படியே பஞ்சம் ஏற்பட்டது. கடவுள் எலியாவுக்கு கெரீத் நீரோடையிலும், அதைத் தொடர்ந்து சாரிபாத் கைம்பெண்ணைக் கொண்டும் உணவளித்தார். இறுதியாக கர்மேல் மலையில் பாகால் தீர்க்கர்களை சவாலுக்கு அழைத்தார் எலியா. அதில் வெற்றி பெற்றார். பாகால் தீர்க்கர்களை கொன்று போட்டார். கர்மேல் மலை நிகழ்வுகளை யெசபேல் அறிந்தாள். கடுங்கோபங்கொண்ட அவள் எலியாவை கொலை செய்வதாக செய்தி அனுப்பினாள். அரசனும், அவள் வழியில் மக்களும் கடவுளை மறந்து வாழ்ந்த சூழ்நிலையில் எலியா தன்னுயிருக்குப் பயந்தார். கடவுள் வாழும் மலை என்ற எண்ணத்தில் ஓரேப் மலைக்குச் சென்று ஓர் குகையில் தங்கினார்.
கடவுள் இறைப் பணியாற்ற வேண்டிய தீர்க்கரைத் தேடி வந்தார். தன் பணியை மறந்து முடங்கியிருந்த தீர்க்கரிடம், எலியாவே இங்கு நீ என்ன செய்கிறாய்? என்று கேட்டார். அதற்கு எலியா சொன்ன பதிலே நமது தியான வாக்கியம். கர்மேல் மலையில் எலியா கண்ட அற்புத செயல்பாட்டை மறந்தார். கடவுள் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையை இழந்தார். தன் செயலை நியாயப்படுத்த தீர்க்கர் வழி தேடுகிறார். எனவே `நான் உங்கள் கடவுள். நீங்கள் என் மக்கள்’ என்கிற உடன்படிக்கையை மக்கள் மீறிவிட்டார்கள். பாகாலை தங்கள் தெய்வமாகக் கொண்டார்கள் என்கிறார். தீர்க்கதரிசிகளை கொன்று இறைவார்த்தை தேவையில்லை என்கிறார்கள் என்று கடவுளின் கேள்விக்குப் பதில் சொல்லுகிறார்.
அதே வேளையில் தான் மட்டும் கடவுளுக்காக பக்தி வைராக்கியமாய் இருக்கிறேன் என்கிறார். கடவுள் அவர் அறியாமையை அறிந்தார். தீர்க்கரிடம் நீ மட்டுமல்ல உன்னைப் போன்று ஏழயிரம் பேர் இருக்கிறார்கள் என்றார். தீர்க்க செய்ய வேண்டிய பணியை பட்டியலிட்டு அனுப்புகிறார். நாமும் நம் வாழ்க்கையில் கடவுளின் மகத்துவமான செயல்களை அனுபவிக்கிறோம், சாட்சியிடுகிறோம். ஆனால் சில நாட்களில் பிரச்சனைகள், நோய்கள் போன்றவைகளை சந்திக்கும்போது தளர்ந்து சோர்ந்து போகிறோம். கடவுளின் மீது நம்பிக்கை இழந்து போகிறோம்.
கடவுள் வரலாற்றில் செயலாற்றுகிறவர். கடந்தகால நிகழ்வுகளைக் கொண்டு எதிர்கால நம்பிக்கையூட்டுகிறார். யோசுவா ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் மலைத்து திகைத்து நின்றார். கடவுள் மோசேயோடு இருந்தது போல உன்னோடும் இருப்பேன் என்று கடந்த கால நிகழ்வை சுட்டிக்காட்டி எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டுகிறார். வாழ்வின் அனுபவங்கள் வழி புது நம்பிக்கைப் பெறுவோம். கடவுளைச் சார்ந்து துணிவோடு வாழுவோம்.
வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! கடந்தகால அனுபவங்களைக் கொண்டு வாழ்வில் நம்பிக்கையோடு வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
