2 இராஜாக்கள் 23 : 1-14                               29 ஜூலை, 2020 புதன்

“கர்த்தரின் பார்வையில் நேர்மையானதைச் செய்து தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம்… நடந்தான்.” – 2 இராஜாக்கள் 22 : 2

பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல், வாழும்போது ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். “பிறந்தது நிகழ்வாக இருந்தாலும், வாழ்வது வரலாறாகட்டும்” என்பார்கள்.

சீர்திருத்தம் செய்து கடவுளின் பார்வையிலும், மக்களின் மனதிலும் இடம்பிடித்த அரசன் யோசியாவை பற்றி இன்று பார்ப்போம். இவர் யூதாவின் அரசன், எதிதாளின் மகன். இவர் தன் இராஜ்யபாரத்தில் எட்டாம் வருடம் கடவுளை தேட ஆரம்பித்து, பன்னிரெண்டாம் வருடத்தில் மேடைகள், விக்கிரகங்களை அற்றுப் போகும்படி செய்தார். பதினெட்டாம் வருடத்தில் ஆலயத்தை சுத்திகரித்தபோது, ஆசாரியனாகிய இல்க்கியா நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டெடுத்தான். இது உபாகமப் புத்தகமாயிருக்கலாம். அதை வாசித்தவுடனே அரசனுக்கும், மக்களுக்கும் குற்றவுணர்ச்சி உண்டானதினிமித்தம், எல்லாரும் அதில் சொல்லப்பட்டவைகளைக் கைக் கொள்ளும்படி உடன்படிக்கை செய்தார்கள். பின்பு யோசியா கர்த்தருக்கு பஸ்காவை ஆசரிக்கும்படி சகல மக்களுக்கும் கட்டளையிட்டான். அதற்கு முன்னும், பின்னும் நடவாதவிதமாய், எருசலேமில் யோசியாவின் காலத்தில் இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.

யோசியாவைப் போன்ற அரசன் அவனுக்கு முன்னிருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதும் இல்லை. யோசியா செய்த சீர்திருத்தங்கள்… இன்றும் நினைக்கப்படுகின்றன. கடவுள் பயத்தோடு தான் எடுத்துக்கொண்ட அரசப்பணியை சிறப்பாக நேர்மையாக செய்தார். நியாயப்பிரமானத்தை கண்டு அதில் சொல்லப்பட்டவைகளை மக்கள் கேட்க வாசிக்க செய்தார். அன்னிய தெய்வ பலிபீடங்களையும், மேடைகளையும் இடித்துப் போட்டார். அவர் ஆலயத்தில் செய்த சீர்திருத்தங்கள் இன்றும் பேசப்படுகின்றன. தனக்கு கொடுக்கப்பட்ட அரசுரிமையை சரியான முறையில் பயன்படுத்தி நல்லாட்சி செய்தவர் யோசியா.

ஆண்டவர் உங்களை எப்படிப்பட்ட பொறுப்பில் நிலையில் வைத்திருக்கிறார்? உங்கள் வேலைகளை கடவுளின் திட்டப்படி செய்கிறீர்களா? கடவுளின் சித்தப்படி செயல்படும் யாருக்கும் எதிர்ப்புகள் வருவது இயல்பே. ஆனால் அவற்றை எதிர்கொள்ள நமக்கு பலம் தருகிறவர் நமது ஆண்டவர் இயேசுவே. வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு யோசியாவின் வாழ்வு ஒரு எடுத்துக்காட்டு. கடவுளில் நிலைத்திருப்போம். நலமானதை செய்வோம். கடவுளுக்கு ஏற்புடைய மக்களாக வாழ்வோம்.

கடவுளே! உமது பாதையை விட்டு விலகாமல் நீர் காண்பிக்கிற பாதையில் நற்காரியங்களை பயனுள்ளதாக செய்து, உமது பார்வையில் நேர்மையாக வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.