ஏசாயா 23 : 17-18                                 ஜூன் 9, 2020 – செவ்வாய்

“அவர் நமது மீறுதல்கள் நிமித்தம் ஒப்புக் கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாகத் தீர்க்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.” ரோமர் 4 : 25

நான் நேசிப்பவர்க்கு உதவுவது என்னால் இயலும். என்னை அறியா தவருக்கும் உதவுவேன்; அதுவும் என்னால் இயலும். நீங்கள் என் வாழ்வில் செய்த உதவியை மறக்க மாட்டேன். என் உயிரைக் கூடக் கொடுப்பேன் என்றும் சொல்லலாம். உண்மையில் அடுத்தவருக்காக நம் அதிக அக்கறைப்படுவது போன்றும் காண்பித்துக் கொள்ளலாம். சுயநலம் மிகுந்த உலகம் இது. ஆனால் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஒருவரைப் பார்த்து ‘நீ போ! நான் உன் தண்டனையை ஏற்பேன்’ என்று நம்மால் சொல்ல முடியுமா? இது போன்றது தான் நமது தியானவரி.

கடவுளின் பார்வையில் நாம் பாவக்குற்றவாளிகள்! கடவுளின் அன்பை மீறினவர்கள். கடவுளின் தண்டனைக்குரியவர்கள். நமது நீதி, கடவுளின் முன் கறைப்படிந்த ஆடை போல் உள்ளது. கடவுள் விரும்பும் நீதியைச் செய்யத் தவறியவர்கள் நாம். கடவுள் நமது மீறுதல்களை மன்னிக்க விருப்பங்கொண்டார். தமது ஒரே பேறான குமாரனை அனுப்பினார். ஏசாயா தீர்க்கர் தனது 53ஆம் அதிகாரத்தில் நமது மீறுதல்கள் நிமித்தமே அவர் காயப்பட்டார், நமது அக்கிரமங்களினிமித்தமே அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை விளைவிக்கும் ஆக்கினை அவர் மேல் வந்தது என்றார். இதற்கிசைய இயேசு கிறிஸ்து இந்த முழு மனுக்குலத்தின் மீறுதல்களையும் சிலுவையில் சுமந்தார். உயிர்த்த ஆண்டவராக நம்மைப் பிதாவோடு இணைத்தார். நம்மை கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற்றினார்.

நானும் நீங்களும் கிறிஸ்துவினால் கடவுள் முன் நீதிமான்கள்! எவ்வளவு பெரிய பாக்கியம்! மரண தண்டனைக்குரிய நான் விடுதலை யாக்கப்பட்டேன். இயேசு கிறிஸ்துவில் எனக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது! எத்தனை மகிழ்ச்சி! நமக்காக தம்மைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்த இயேசுவுக்கு நம்முடைய கைம்மாறு என்ன? நம்மை அவருக்கு அர்ப்பணிப்பது அல்லவா?

‘வா பாவி மலைத்து நில்லாதே வா..
உன்னிடத்தில் ஒன்றுமில்லை என்று எண்ணித்
திகையாதே…உன்னிடத்தில் ஒன்றுமில்லை யென்று
அறிவேனே உள்ளபடி வாயேன்’

என்ற பரமனின் அழைப்பை ஏற்போம்! இயேசுவில் நீதிமானாக உலகில் வலம் வருவோம்! புதிய வாழ்வில் மகிழ்ச்சி கொள்வோமாக.

எங்கள் மீறுதல்களை ஏற்றுக் கொண்டு, எங்களை மன்னித்து கடவுளோடு இணைத்த கிறிஸ்துவே! உம்மில் வாழ கிருபை செய்தருளும். ஆமேன்.