சங்கீதம் 24 : 3-7 ஜூன் 6, 2020 – சனி
“கடவுள் யூதருக்கு மாத்திரமா கடவுள்? புறஜாதிகளுக்கும் கடவுள் அல்லவோ? கடவுள் ஒருவர் என்றால் புறஜாதிகளுக்கும் அவரே கடவுள்.” ரோமர் 3 : 29
இல்ல ஜெபம் ஒன்றை நடத்தச் சென்றேன். இல்லத்தார் ஜெபத்திற்கு ஆயத்தமானார்கள். அப்போது அங்கிருந்த ஒரு சகோதரி என்னிடம் வந்து, ‘ஐயா! நான் படிப்பறிவில்லாதவள். நான் வேற்று மதத்தைச் சார்ந்தவள். பக்கத்து வீட்டில் இருக்கிறேன். நான் இந்த ஜெபத்தில் கலந்து கொள்ளலாமா’ என்று கேட்டார். தாராளமாகக் கலந்து கொள்ளுங்கள் என்றேன். ஏன் இந்த வினா? உங்கள் கடவுள், எங்கள் கடவுள் என்ற எல்லை வைத்து கிறிஸ்தவர்களாகிய நாம் வாழ்கிறோமா? கடவுள் ஒருவரே. அவர் எல்லாருக்குமுரியவர். எல்லைகளுக்கப்பாற் பட்டவர். முழு உலகைப் படைத்தவர், மீட்கிறவர் கடவுள். முழு உலகும் அவருக்கே சொந்தம் என்பதைத் தெளிவாக்குகிறது இன்றைய தியான வசனம்.
யூதர்களைக் கடவுள் தெரிந்தெடுத்தார். ஆனால் கடவுளால் தெரிந்து கொள்ளப் பட்டதின் நோக்கத்தை அவர்கள் மறந்தார்கள். யூதர்களின் அழைப்பின் நோக்கம் பூமியின் கடைமுனைமட்டும் ஒரே கடவுளின் புகழை வெளிப்படுத்துவதுதான். பல தீர்க்கர்கள் யூதர்களுக்கான இறை அழைப்பை நினைவு படுத்தினர். ஆனால் யூதர்கள் அதை ஏற்க மறுத்தனர்.
கடவுள் ஒருவரே. அவரே முழு மனுக்குலத்திற்கும் தந்தை. இதை கடவுள் தமது ஒரே பேறான குமாரனில் வெளிப்படுத்தினார். ஒருவரும் கெட்டுப் போகாமல் நிலையான வாழ்வைப் பெறவே கடவுள் இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் முழு மனுக்குலத்தையும் பிதாவோடு ஒப்புரவாக்கினது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் யாராயிருந்தாலும் கடவுளுக்குச் சொந்தம். கடவுளுக்கு ஏற்புடையவர்களே.
இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்பதை ஏற்போம். அண்ட சராசரங்களையும் படைத்த கடவுள் ஒருவரே என்பதைப் பறைசாற்றுவோம். எல்லா ஏற்ற தாழ்விற்கும் அப்பாற்பட்டவர் கடவுள் என்பதை உணர்வோம். நமது சாதி, மதம், அந்தஸ்து, எதுவும் மெய்க் கடவுளை இயேசுவில் அறியத் தடை இல்லை என்பதே உண்மை. இங்கே யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரே மனுஷனாயிருக்கிறீர்கள் என்கிறது திருவசனம். கிறிஸ்துவில் ஒரே கடவுள்! ஒரே மக்கள் ஒரே இனம்!
பிதாவே! எந்தவிதப் பாகுபாடுமின்றி உம்மை ஒரே கடவுளாக ஏற்க கிருபை செய்தருளும். கிறிஸ்துவின் வழியே! ஆமேன்.
