மாற்கு 14 : 55-64                        31 மார்ச், 2020-செவ்வாய்

“…அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், சாட்சியங்கள் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை.” – மாற்கு 14 : 56

நீதி மன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கு சாட்சிகள்தான் முக்கியமானவர்கள். சாட்சியங்கள் எழுத்து வடிவிலோ, பேச்சுவடிவிலோ நேருக்கு நேராகவோ, தடங்கள் வடிவிலோகூட இருக்கலாம். அவை உண்மையானவைதானா? என்பதுதான் கேள்வியாகும்.

பெரும்பாலும் கள்ள சாட்சிகள் நீதியை அழித்துவிட உதவிசெய்கிறார்கள். சில சமயங்களில் கள்ள சாட்சியங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதால் குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்படுகிறார்கள். நிரபராதிகள் தண்டனை பெறுகிறார்கள். இயேசுவின் திருப்பாடுகளுக்கு கள்ளச் சாட்சிகளின் பங்கும் இருக்கிறது. அவர்களின் சாட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாக இருந்தன. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக என்பது பத்துக் கற்பனைகளில் ஒன்று. பல நேரங்களில் நாம் இந்தத் தவறை தெரிந்தே செய்கிறோம். இப்பாவச் செயல்குறித்து நாம் மனம் வருந்துகிறோமா?

இந்த தவக்கால தியானங்களும் சிலுவைச் சிந்தனைகளும் நம்மை இயேவுக்கு உண்மையான சாட்சிகளாக மாற்ற வேண்டும். எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்று நம்மை அழைத்திருக்கிற ஆண்டவர் முன் நம்பொய்களை எல்லாம் களைந்துவிடுவோம்.

நமது உள்ளங்கள் கள்ளத் தனங்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தாலும் சிலுவையைப் பற்றிய தியானங்கள் நம்மை உண்மையான சாட்சியின் வாழ்வுக்கு வழி நடத்தட்டும். இயேசு கிறிஸ்துவே வாழ்வின் உண்மை என்பதை மறுபடியும் ஏற்றுக்கொண்டு பொய்களை நீக்கிவாழ தூய ஆவியானவர் நம் இருதயங்களை சுத்தப்படுத்துவாராக!

எங்கள் பொய்கள், மாய்மாலங்கள் பித்தலாட்டங்கள் அனைத்தையும் இந்த ஒருசந்திக் காலத்தில் மாற்றித்தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.