யோவான் 19 : 8-13 20 மார்ச், 2020-வெள்ளி
“மறுபடியும் மாளிகைக்குள்ளே போய், இயேசுவினிடம்: நீ எங்கிருந்து வந்தவன் என்று கேட்க, …….” – யோவான் 19 : 9
நான்கு திசைகளிலும் அரண்களைகட்டி நடுவில் மனை ஒன்றை பெருங்காவல்களுக்கும் மத்தியில் எழும்பி நிற்கச்செய்வது மாளிகையாகும். பொதுவாக மாளிகை என்பது மன்னர்களின் சொர்க்கபூமி என்றும் உலகம் கூறுகிறது. தஞ்சாவூர் அரண்மனை, மைசூர் அரண்மனை, ஜெய்ப்பூர் அரண்மனைகள் இதற்கு சாட்சி பகர்கின்றன.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பலஸ்தீனா தேசத்தின் ஆளுநராக ரோமப் பேரரசால் நியமிக்கப்பட்டிருந்தவன் பொந்தியு பிலாத்து ஆவான். இந்த தேசாதிபதியின் அரண்மனைக்கு இயேசு கிறிஸ்து குற்றம் சாட்டப்பட்டவராக கொண்டு வரப்பட்டார். மாளிகை வாசத்தை வெறுத்தவர் இயேசுகிறிஸ்து. மனுஷகுமாரனுக்கு தலை சாய்க்க இடமில்லை என்று வாழ்ந்தவர் இயேசு. தன்னையே வெறுமையாக்கின இயேசுவுக்கு இந்த மாளிகையில் போர்ச் சேவகர்கள் உடல் ரீதியான துன்பங்களைக் கொடுத்தார்கள்.
இந்த மாளிகையில் தான் இயேசு ‘நான் அரசன் தான்’ என்று பிலாத்துவிடம் கூறினார். ஆனால் அவரது மாளிகை பரலோக அரசு என்பதை வெளிப்படுத்தினார். பிலாத்துவின் அரசு இயேசுகிறிஸ்துவை பெரும் பாடுகளுக்குள் தள்ளியதால்தான் நமக்கு நிலையான வாழ்வு பரலோக அரசில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
பாடுகள் மூலம் பரலோக வாழ்வில் நுழைய முடியும் என்ற உண்மை இயேசு பிலாத்துவின் மாளிகையில் நுழைந்ததன் வழியே நமக்கு உறுதி செய்யப்படுகிறது. இயேசுவின் பாடுகளை நினைவிற்கு கொண்டுவந்து இத்தவக் காலத்தில் மனம் மாறுவோம். மாளிகை வாசம் தராத இன்பம் பரமனின் வீட்டில் உண்டு என்று நம்பிக்கை பெறுவோம். விண்ணுலக வாழ்வில் இயேசு ஆயத்தம் செய்த மாளிகை நமக்காகக் காத்திருக்கிறது. கடவுள் நம்மை ஆயத்தம் செய்து இங்கே கொண்டு சேர்ப்பார் என்ற உறுதியில் வாழ்வோம்.
பரலோகத்தில் வாழுகின்ற கடவுளே! உம்முடைய பரம மாளிகைக்குள் வர எங்களை இயேசுவின் பாடுகளைக் கொண்டு ஆயத்தமாக்கும் இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.
