மத்தேயு 27 : 1-8                                                              07 மார்ச், 2020-சனி

“அப்பொழுது அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, போய் நான்றுகொண்டான்.” – மத்தேயு 27 : 5

யூதாவின் தென்கோடியிலிருந்த ஸ்காரியோத் என்னும் நகரத்தைச் சேர்ந்தவன் யூதாஸ். இயேசுவின் சீடர்களின் குழுவில் பொருளாளராக இருந்தவன். முதலில் நம்பத் தகுந்தவராக இருந்து பின்னர் பண ஆசைக்குள் யூதாஸ் தள்ளப்பட்டிருக்கவும் இடம் உண்டு. இவனுடைய இருதயத்தில் சாத்தான் புகுந்தான் என்று திருமறை கூறுகிறது. யூதாஸ் படிப்படியாக இயேசுவோடும் அவரது சீடர்களோடும் உள்ள உறவை துண்டித்துவிட்டு, இயேசுவுக்கு எதிரான கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டான்.

யூதாஸின் முத்தமும் துரோகமும் இயேசுவை குற்றவாளியாக உலகத்திற்கு காட்டியது. துரோகம் செய்கிறவர்களை இந்த தவக் காலத்தில் கடவுள் எச்சரிக்கிறார். போலித்தனமான அன்பு காட்டாதிருப்போம். இயேசு கிறிஸ்துவை தேவ குமாரன் என்று நம்பாதவர்கள் இருக்கிறார்கள். அவர் பாவப் பரிகாரி என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். குற்றங்களை மன்னிக்கிறவர் என்றும் உணராதவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் முடிவை தாங்களே தேடிக் கொள்கிறார்கள் என்பதை யூதாஸிடமிருந்து கற்றுக் கொள்ளுவோம். தவறான முறையில் சம்பாதிக்கப்படும் செல்வம் நம்மை நிச்சயம் காப்பாற்றப் போவதில்லை. வெள்ளிக்காசுகள் யூதாஸிற்கு வாழ்வைக் கொடுக்கவில்லை. மாய்மால அன்பும், பணவெறியும் நம் வாழ்விற்கு என்றும் ஆபத்தானவை. சிலுவை, இயேசுவின் அன்பின் ஆழம், அகல உயரங்களை நமக்கு காட்டுகின்றன. மனந்திரும்புவோம், அழிவுநிலை மாறி வாழ்வு நிலைக்கு வந்திடுவோம். சிலுவை நாதர் இரங்கி நம்மைக் காப்பாராக!

எங்கள் வாழ்வின் ஆதாரமே! கடவுளே!! நாங்கள் உலகப் பொருளுக்கும் உமக்கும் ஒரே நேரத்தில் சேவை செய்ய இயலாது என்பதை உணர்ந்து வாழ கிருபை தாரும்! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.